தி.மு.கவை மீண்டும் சிக்கலில் இழுத்து விட்ட ஆ .ராசா...!பதப்பதைக்கும் அறிவாலயம்..

Update: 2023-06-23 02:23 GMT

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற பிறகு  தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழக கவர்னர் அவர்களுக்கும் , ஆளும் கட்சியான திமுகவிற்கும் இடையில் பல்வேறு தரப்புகளில் சர்ச்சை எழுந்து இருக்கிறது. குறிப்பாக ஈ.வே.ரா வாதக் கொள்கைகளை பின்பற்றும் திமுக, அதற்கு எதிர்மறையாக சனாதன தர்மத்தை போற்றும் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி அவர்களை எந்த வகையில் எல்லாம் எதிர்க்கலாம் என்பதை நோக்கமாகக் கொண்டு அறிவாலய வட்டாரங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து, அவற்றை தாங்கள் எதிர்க்கிறோம் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்பது போன்றெல்லாம் திமுக தொடர்ச்சியாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை தமிழகத்தில் முன்வைத்து இருக்கிறது.  


சமீபத்தில் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது இருந்தார். இதற்கு திமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளலார் வைதீக மதநெறிகளை சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து தனி சமய வழி உருவாக்கியவர். வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் இந்த ஒரு சனாதன தர்ம பேச்சுக்கு பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர். "ஆளுநர் திட்டமிட்டே தமிழ்நாடு மக்கள் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல் அபத்தக் கருத்துகளை வெளியிடுகிறார்" என்று அவர் தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் கையெழுத்து இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறது. 


தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் ஜூன் 20 ந் தேதியில் இருந்து அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது என்று கூறப் பட்டிருக்கிறது. இதையொட்டி ஜூன் 20 ந் தேதி காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.


இந்த நிகழ்ச்சியில் வைகோ கூறும் போது, "கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும். தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் " என்று குறிப்பிட்டு இருக்கிறார்.  


இந்த நிலையில் தற்பொழுது திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். பெரம்பலூரில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 'அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள், ஒரு மூடத்தனமான மனிதர் இங்கே வந்து கவர்னராக இருக்கிறார்?' என ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார்.

அரசியலமைப்பு சாசனத்தின் படி ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவரை முட்டாள் என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது. அரசியல் அமைப்பு சாசனத்தின் படி இது கடுமையாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவே ஆளுநர் தரப்பில் திமுக மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு விஷயங்களையும் கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அறிவாலயம் வட்டாரங்கள் பதட்டத்தில் உள்ளது. 

Tags:    

Similar News