இரண்டு நாளாகியும் கிளம்பாத வருமானவரித்துறை...! பெரிய லெவலில் சிக்கிய விவகாரங்கள்!

Update: 2023-06-26 05:15 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்பொழுது அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து ஓய்வில் இருந்து வரும் நிலையில் வருமான வரி துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அமைச்சர் ஒரு புறம் ஓய்வு எடுக்கட்டும், ஆனால் அவர் தொடர்புடைய இடங்களில் தாங்கள் நிச்சயம் சோதனை செய்து யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை நிரூபிப்போம்? என்ற விதமாக வருமானவரித்துறையினர் அதிரடியாக அமைச்சரின் தொடர்புடைய கரூரில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை தற்பொழுது தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இதற்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை வருமான வரித் துறை சோதனை 8 நாட்கள் நடைபெற்றது. சோதனையின் போது சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் சோதனையின் போது முக்கியமான ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி இருந்தார்கள். அவற்றை வைத்து தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அவர்கள் மேற்கொண்டு இருப்பதாகவும் சில முக்கியமான தகவல்கள் வெளியாக இருக்கிறது.

கடந்த முறை வருமான வரித் துறை சோதனையில் கரூர் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் மற்றும் பங்குதாரர்கள் கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கார்த்திக், ரமேஷ் வீடுகளில் தலா ஒரு அறை, மேலும் காமராஜபுரத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், காந்திரபுரத்தில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு உள்ளிட்ட இடங்களில் சீல் வைத்தனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறிக்கொண்டு கரூர் கேங் என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்வது மற்றும் பொது இடங்களில் அராஜகமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பார் ஓனர்களை மிரட்டுவது, மக்களை மிரட்டுவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து வந்த காரணத்தினால் கரூர் கேங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் புகார்களும் முன் வந்தது. இந்த புகார்கள் அடிப்படையில் வருமான வரித்துறை தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.

இந்நிலையில், கரூர் ஈரோடு சாலையில் கோதை நகரில் உள்ள உள்ள கார்த்திக், அதிபர் ரமேஷ் வீடுகள், காமராஜபுர் பொறியாளர் பாஸ்கர், வையாபுரி நகர் 4வது குறுக்குத் தெருவில் உள்ள ஆடிட்டர் சந்திரசேகர் அலுவலகங்கள் ஒப்பந்ததாரர் சங்கர், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.


மேலும் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் வருமான வரித் துறையினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் சோதனை மேற்கொண்டனர். எனவே கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு வரை வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதில் கிடைக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான வழக்கை மேலும் தீவிர படுத்த முடியும் முடியும் என்று வெளிவட்டார தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாது கரூர் கேங்கின் ஆட்டம் இனி முடிவுக்குக் கொண்டு வர வருமானவரித்துறை ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.


ஏற்கனவே செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக ஏன் நீடிக்க வேண்டும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மற்றும் அதிமுக தரப்பில் கூறி வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த ரெய்டில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வருமானவரித்துறையினருக்கு கிடைத்த காரணத்தினாலேயே வருமானவரித்துறை சோதனையை விடாமல் நீடித்து வருகின்றனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

Tags:    

Similar News