"பாரதம்" எழுச்சியால் பாதாளம் போகும் "இண்டியா" கூட்டணி: வரலாற்றை விழுங்கிய காங்கிரஸ் பின்னணி ஓர் அலசல்!

Update: 2023-09-07 01:04 GMT

ஜி20 மாநாட்டையொட்டி விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் "பாரத குடியரசுத் தலைவர்" என்று அச்சிடப்பட்டிருப்பது விவாதப்பொருளாகி இருக்கிறது. "இந்தியா" என்பது "பாரதம்" என்று மாற்றப்பட்டது பலருக்கும் எதிர்பாராத  அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் பாஜகவுக்கு எதிராக  கிளம்பியுள்ள எதிர்கட்சி கூட்டணிக்கு இந்தியாவின் பெயரை மையமாக வைத்து, "இண்டியா" என பெயரிட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவதாக வெளியான தகவல் எதிர்கட்சிகளுக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது. 

அரசியலமைப்பில் சொன்னபடி தான் இருக்கு 

"பாரத்" என்ற சொல் அரசியலமைப்பிலும் உள்ளது. "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியல் சாசனத்தின் முதல் வரியிலேயே "இந்தியா என்கிற பாரதம்" என்று தான் இருக்கிறது. வருங்காலத்தில், ஆங்கிலேயர்கள் வழங்கிய "இந்தியா" என்கிற பெயர் மாற்றப்படலாம் என்பதை இது மறைமுகமாக உணர்த்துகிறது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் தான் பிரபலம் அடைந்தது. ஹிந்துஸ்தான், சிந்து என்கிற பெயர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள், இஸ்லாமிய படையெடுப்புக்கு பிறகு புகுத்தப்பட்டவை. பாரதம் என்ற பெயரே முன்பு இருந்து நிலைந்துள்ளது. அகண்ட பாரதம் என்ற இலக்கை நோக்கி இப்போது பாஜகவின் பயணம் தொடர்கிறது. 

பாஜக மாற்றுகிறது என்பதாலேயே எதிர்ப்பு 

இப்போது இந்தியாவின் பெயரை மாற்ற என்ன அவசியம்? இது காலம் காலமாக இருந்து வரும் பண்பை அழிக்கும். மக்கள் மனதில் பதிந்துள்ள பெயரை மாற்றுவது நியாயமா என ஒரு சிலர் எதிர்க்கின்றனர். "மதராஸ் மாகாணம்" இருந்த தமிழகத்தின் பெயர் "தமிழ்நாடு" என மாற்றப்பட்டுள்ளது. "மெட்ராஸ்" சென்னை ஆனது. அப்போதெல்லாம் எந்த எதிர்வினையும் இல்லையே. ஏன் என்றால், பெயர் மாற்றம் நடந்த போது திமுக ஆட்சியில் இருந்தது. அவர்கள் கொள்கை, கோட்பாடு, அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்துகொண்டனர். ஆனால் பாஜக அரசு இப்போது செய்யப்போகும் மாற்றம் இந்திய அரசியலமைப்பில் சொன்ன படியே நடக்கப்போகிறது. இருந்தும் பாஜக அரசு நாட்டின் பெயரை மாற்றம் செய்கிறது என்பதே, எதிர்கட்சிகளுக்கு சோகத்தை தந்துள்ளது. 

பாரதம் நம் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத பெயராம் 

பாரதம் என்பது ஆரியர்களின் சொல். ஆரிய சாயலை பாஜக இந்தியாவில் புகுந்த பார்க்கிறது என திமுகவினர் சொல்கின்றனர். இவர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் திராவிடம் மாடல் சொல் எங்கிருந்து வந்தது? அது கால்டுவெல் என்ற வெளிநாட்டுகாரர் சூட்டிய பெயர் தானே? அதே போல தான் இந்தியா என்ற பெயரும் ஆங்கிலேயர்கள் சூட்டியது. இதை எல்லாம் தாண்டி நம் மண்ணுக்கு உரித்தானது பாரதம் என்கிற பெயர். இதை மனதில் வைத்தே பாரதியார்,

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! 

என அன்றே கவிதை வரிகளால் உணர்த்திவிட்டார். அவருக்கு இல்லாத தமிழ் பற்று, தேசிய பற்றா இப்போது உள்ள திமுகவினருக்கு இருந்துவிடப்போகிறது?

ஆங்கிலேயர் சாயல் மாறுகிறது 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பம்பாய்-மும்பை, கூர்கான்-குருகிராமம் என பல முக்கிய நகரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்று மாற்றப்பட்டாலும், இன்னும் பலர் பழக்க தோஷத்தில் மெட்ராஸ் என்றே சொல்கின்றனர். இதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது இந்தியா என்ற பெயர் மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எதிர்கட்சிகள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

இத்தனைக்கும் ஏன் ராகுல் காந்தி தொடங்கிய பாத யாத்திரை கூட, "பாரத் ஜோடோ" என்று தானே பெயரிட்டார். அவர் பாரத் என்ற பெயர் சரிவராது என நினைத்திருந்தால் "இந்தியா ஜோடோ" என தானே பெயரிட்டு இருக்க வேண்டும்?

காரணம் "இந்தியா"  என்பதை விடவும்  "பாரதம்" என்பதே நம் நாட்டின் ஆதிகால பெயர்.  இந்தியாவின் பெயர் மாற்றம் 1972ல் இந்திரா காந்தியின் ஆட்சியில் சுதந்திர வெள்ளிவிழா கொண்டாடிய போதோ, 1997ல் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் ஆட்சியில் சுதந்திர பொன்விழா கொண்டாடியபோதோ மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது பிரதமர் நரேந்திர மோடி தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துகிறார் அவ்வளவு தான். 

இன்னொரு அதிர்ச்சியும் இருக்கு 

இந்தியா அரசியலமைப்பு முதன் முதலில் ஹிந்தியில் தான் எழுதப்பட்டது. அதன் பிறகே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஹிந்தியில் எழுத்தப்பட்ட மூல அரசியலமைப்பில் இந்தியா என்ற பெயர் எங்கும் இடம்பெறவில்லை. பாரத் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் விருப்பமும் இந்தியா பாரத் என அழைக்கப்படுவதாக மட்டுமே இருந்துள்ளது. அரசியலமைப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் இந்தியா என்ற வாசகம் வருகிறது. 

மக்கள் தியாகத்தை சுரண்டிய காங்கிரஸ் 

மக்கள் போராடி பெற்று தந்த சுதந்திரத்தை, தாங்கள் பெற்று தந்தது போல சொந்தம் கொண்டாடியது காங்கிரஸ். அதனால் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என காந்தி அன்றே சொன்னார். ஆனால் அதை மீறி காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர்ந்தது. தேசிய கொடியை போலவே காங்கிரஸ் கட்சி கொடியும் வடிவமைக்கப்பட்டது. அதன் மூலமும் அரசியல் ஆதாயம் அடைந்தது. சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் அமர்ந்தது முதல், 2014ல் நாடு முழுவதும் துடைத்து எறியப்படுவது வரை அவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

இந்திரா ரோஜ்கர் யோஜனா, நேரு பெயரில் திட்டம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என தொடங்கி கடைசியாக சந்திரயான் 1 நிலவில் தடம் பதித்த இடத்துக்கு "ஜவகர் பாயிண்ட்" என பெயர் சூட்டியது வரை அவர்களது குடும்ப அடையாளத்தை பதித்தனர். 

இப்படிப்பட்ட வரலாறு இருக்கும் போது, அரசியலமைப்பு படி இந்தியாவின் பெயரை மத்திய அரசு மாற்றுவதை எதிர்ப்பதற்கு எந்த அறுகதையும் இவர்களுக்கு இல்லை. 


 




Similar News