எஸ்.சி சான்றிதழ் வைத்து ஏமாற்ற்றும் மத போதகர் - தேசிய பட்டியலின ஆணையத்தில் அதிரடி புகார்!

Update: 2021-04-12 09:58 GMT

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி மத போதகராக மேலும் பலரை மதம்‌மாற்றி வரும் நிலையிலும், இந்து SC என்று சாதிச் சான்றிதழ் வைத்துக் கொண்டு அரசை‌ ஏமாற்றி வரும் ஆந்திராவைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் மீது தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Harvest India என்ற மிஷனரி அமைப்பை நடத்தி வரும் சுரேஷ் குமார் கதேரா இந்து மதத்தின் மீதும் இந்துக்களின் மீதும் வன்மத்தைத் தூண்டும் வண்ணம் பேசியதாகவும், பிரதமர் மோடி பற்றி பொய்யான தகவல்களைக் கூறி வெறுப்பைப் பரப்பியதாகவும் ஏற்கனவே இவர் மீது புகார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இந்தியாவில் கிறிஸ்தவர்களே இருக்கக் கூடாது என்று நினைப்பதாகவும், இந்தியாவில் பல மத போதகர்கள் கொலை செய்யப்படுவதாகவும் சர்வதேச நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். மேலும் இந்தியாவில் பல இடங்களில் சர்ச்சுகள் தீவைத்து எரிக்கப்படுவதாகவும் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் "135 கோடி இந்தியர்கள் முப்பத்து முக்கோடி தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் உண்மையில் யாருக்கு சக்தி இருக்கிறது என்று அவர்கள் பார்க்க வேண்டும். யாருடன் இயேசு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்..நாம் எதிரியின் (இந்துக்களின்) கோட்டையில் இருக்கிறோம்.. அவர்கள் சூனியம், மந்திர தந்திரம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுகிறார்கள்..சிலை வழிபாட்டில் அதிகம் பேர் ஈடுபடும் இடம் இது." என்று இந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசியுள்ளார்‌.

ஆந்திர மாநிலம் கொரூருவில் மத மாற்றத்தில் ஈடுபடும் மத போதகர் சுரேஷ், "எதிரிகளின் கோட்டையான கொடூருவில் தானும் தனது ஆதரவாளர்களும் 'போர்'" செய்ய உள்ளதாகவும், "இது வரை யாரும் இங்கு 'நற்செய்தி' அறிவிக்க முயலவில்லை என்பது வருத்தமளிக்கிறது" என்றும் பேசியுள்ளார். இதே போல் பிரவீன் சக்ரவர்த்தி என்ற மத போதகர், கிராமங்களை முழுதாக மதம் மாற்றியதாகவும், இந்து கடவுள் சிலைகளை காலால் எட்டி உதைத்ததாகவும் தம்பட்டம் அடித்துக் கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

அதே போன்று மத போதகர் சுரேஷ் குமார் மீதும் மத வெறுப்பைத் தூண்டியதாக புகார்‌ அளிக்கப்பட்டது. தற்போது மத போதகர் சுரேஷும் அவரது மனைவி ஹெனி கிறிஸ்டினா ஆகிய இருவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மத போதனை செய்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் வைத்துக் கொண்டு அரசு சலுகைகளை அனுபவித்து வருவது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் பட்டியலினத்தவர் பரிக்ஷன சமிதியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Harvest India அமைப்பு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து FCRA மூலம் நிதி பெற்று வருகிறது. மத போதகர் சுரேஷ் குமார் இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் வெறுப்பைப் பரப்பியதைச் சுட்டிக் காட்டி Legal Rights Protection Forum என்ற தன்னார்வ அமைப்பு முன்னர் மத்திய உள்துறை அமைச்கத்திடம் FCRA உரிமத்தை ரத்து செய்து Harvest India அமைப்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News