169 நகரங்களில் பிரதமரின் இ-பஸ் திட்டம்: தமிழகத்தில் ஜாக்பாட் வாய்ப்பை பெற்ற முக்கிய நகரங்கள்!

Update: 2023-10-05 03:18 GMT

மாநகரப் பேருந்து இயக்கங்களை மேம்படுத்துவதற்காக “PM-eBus Sewa” என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இந்த திட்டத்தை 10 ஆண்டுகள் அல்லது 2037 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.57,613 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுக்கும். எஞ்சிய தொகையை மாநில அரசுகளும், தனியாரும் இணைந்து பங்களித்து செயல்படுத்தும். 

10,000 இ-பஸ்கள் 

முதல் கட்டமாக 169 நகரங்களில் 10,000 இ-பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மண்டலம் மற்றும் மலை பகுதி மாநிலங்களின் தலைநகரங்கள் உட்பட 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூன்று லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைகளை உருவாக்கும்.

2 வழிகளில் செயல்படுத்தப்படும் 

நகர பேருந்து சேவைகளை மேம்படுத்துதல்:

169 நகரங்களில் ஏற்கனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட பேருந்துத் திட்டம் மூலம் 10,000 இ-பஸ்களுடன் நகரப் பேருந்து இயக்கப்படும். 

ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு, டிப்போ மூலம் மின்சார பேருந்து இயக்கப்படும். 

பசுமை நகர்ப்புற மேம்பாடு

181 நகரங்களில் மல்டிமாடல் இன்டர்சேஞ்ச் வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள், சார்ஜிங் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முயற்சிகள் இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படும். இந்த இரண்டு வழிகளிலும் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் கொடுக்கும் .

வெளிநாடுகளுக்கு இணையான நுட்பம் 

NCMC (National Common Mobility Card) என்ற முறை மூலம் வெளிநாடுகளை போல கார்டு ரீசார்ஜ் முறையில் டிக்கெட் எடுக்கும் நுட்பம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார், ஆவடி, அம்பத்துார் நகரங்களில் இந்த திட்டம் வருகிறது 


Similar News