தலைவிரித்தாடும் மேற்கு வங்காளத் தேர்தல் வன்முறை - ஓர் பார்வை!

Update: 2021-07-25 01:13 GMT

மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்து வரும் வன்முறை ஒரு 'கட்டுக் கதை' என்ற ரீதியில் அம்மாநில ஆளும் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களால் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவின்படி, வங்காள வன்முறையின் அடிப்படை உண்மைகளை ஆராய்ந்து, ஜூலை 13 அன்று உயர்நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி, பத்திரிகை மற்றும் பொது மக்களுக்கு கசிந்துள்ளது. இதில், 'மேற்கு வங்கம் ஆள்பவர்களின் விதிகளின் கீழ் உள்ளது, சட்ட விதிகளின் கீழ் அல்ல' போன்ற வாசகங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன.

மே 2 ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகள் குறித்து ஆராய ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட NHRC குழு, வங்காள மோதல்களை "ஜனநாயகத்தின் மரண ஒலி" என்று குறிப்பிட்டள்ளது.

50 பக்க அறிக்கையின் ஒரு பகுதி பொது களத்தில் கசிந்துள்ள நிலையில், இந்த அறிக்கை ஏன் உயர் நீதிமன்றத்தில் ரகசியமாக சமர்ப்பிக்கப்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். கசிவுக்கான சரியான காரணம் தங்களுக்குத் தெரியாது என்றும், உயர்நீதிமன்றத்தைத் தவிர ஆணைக்குழு தனது அறிக்கையை அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபால் போன்ற வழக்கறிஞர்கள் உட்பட 10 பேருக்கு அனுப்பியதாகவும் NHRC பதில் அளித்துள்ளது.

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் என பெயரிடப்பட்ட 9,304 பேரில், 3% க்கும் குறைவானவர்கள் தான் தற்போது சிறையில் உள்ளனர்" எனக் குறிப்பிடும் NHRC இன் அறிக்கை, மேற்கு வங்க அரசு குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை விளக்குகிறது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மேற்கு வங்காளத்திற்கு எதிரானது என்றும், அங்கங்கு நடந்த சண்டைகளை பா.ஜ.க பெரிதுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது.

"வங்காள வன்முறை" என்பது, பா.ஜ.க சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் கூறும் கட்டுக்கதை என்று கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றி வாழும் வங்காள மக்களும் நம்புகிறார்கள். உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. இத்தகைய மக்கள் பா.ஜ.க உலகின் இரண்டாவது பணக்கார கட்சி என்றும் வங்காளத்தில் இத்தகைய நிகழ்வுகளை பா.ஜ.கவே நடத்தி அதற்கு 'வன்முறை' என்று பெயரிடுவதாகவும் கருதுகிறார்கள்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் பா.ஜ.கவின் ஆதரவாக செயல்படுவதாகவும் கருதுகிறார்கள். யார் இவர்கள்? ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் அரசியலால் பலனடைந்த இன்ஜினியர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் என பலரும் இத்தகைய 'வங்காள வன்முறை- கட்டுக்கதை' சிந்தனையை ஊக்குவிக்கிறார்கள்.  

இடதுசாரி நேரு கொள்கைகள் அல்லது திரிணாமுல் கட்சியிடமிருந்து தனிப்பட்ட முறையில் அடைந்த பலன்கள் ஆகியவற்றால் பெங்காலிகளில் ஒரு பிரிவினர், பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போட்ட ஒரே காரணத்தினால் தங்கள் சக பெங்காலிகள் அனுபவிக்கும் துயர்களை கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட பிரிவினர் பெரும்பாலும் மேட்டுக்குடி பணக்காரர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை .

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அரக்கத்தனமான ஆட்சியினை ஒப்புக்கொள்வது, தங்களுடைய 'தாராளவாத', 'மதவாத' கொள்கைகளிடமிருந்து 'விலகுவதாக' ஆகிவிடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மேற்கு வங்காளம் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதத்தில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 22 சதவிகிதமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற முடியாத சூழலை உருவாக்குகிறது. இதன் காரணமாக அவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் அரசியலை முன்னெடுத்துச் சென்றனர். இதனால் அவ்வப்போது அவர்களுக்கு நிதி கிடைக்கிறது.

எந்த வகையிலான நிதி? கிளப்புகள், பூஜா கமிட்டிகள், விளையாட்டு அகாடமி போன்ற பல விதங்களில் அரசு நலத்திட்ட உதவிகளுக்கான நிதிகள் இவர்களை வந்து சேர்கின்றன. இதன் காரணமாக தங்கள் வருமானத்திற்காக திரிணாமூல் காங்கிரஸ் மீது கணிசமான பகுதியினர் சார்ந்திருக்கிறார்கள். மேற்கு வங்காள முதல்வர் உண்மையான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதற்கும், காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமா?

மனித உரிமைகள் ஆணையம், வங்காள வன்முறை 'முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று' என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் நடந்த பல சம்பவங்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் இத்தகைய கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இத்தகைய 'ஆபத்து' நடைபெறும் என பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டினார். பல இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் காவல்துறையினரையும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரையும் (CRPF) மிரட்டிய பல வீடியோக்கள் இருக்கின்றன.

வங்காள வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல, வங்காள எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் அமைதியும் திட்டமிடப்பட்டது தான் போல. இத்தகைய ஆதரவு கிடைக்கும் என்பது மம்தா பானர்ஜிக்கு முன்கூட்டியே தெரியும் போல் தெரிகிறது.

வங்காள வன்முறையின் தீவிரத்தை குறித்து மேற்கு வங்காள அரசாங்கம் வார்த்தையால் மறுத்தாலும், பக்ரீத் முடிந்தவுடன் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரானாவை காரணம் காட்டி செய்யப்பட்ட இந்த நடவடிக்கைகளால் உண்மையில் வன்முறை எந்த அளவுக்கு நடந்தது என்று களத்திற்கு சென்று உறுதிப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. வன்முறையின் உண்மைத்தன்மையை ஏன் வங்காள மீடியாக்கள் அலசி ஆராயவில்லை? ஏன் களத்திற்கு சென்று உறுதிப்படுத்தவில்லை? ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் மேற்கு வங்காளத்தில் ஏன் முற்றிலுமாக செயல்படவே இல்லை?

மேற்கு வங்காள மீடியாக்கள் முழுவதுமாக நிதி ஆதரவிற்காக மேற்கு வங்காள அரசை நம்பியுள்ளதா? ஏன் தேசிய மீடியாக்கள் மேற்கு வங்காளத்திற்கு செல்லவில்லை? பா.ஜ.க கூறுவது பொய் என்றால் களத்திற்கு சென்று ஏன் அதை எளிதாக நிரூபிக்கவில்லை?  

உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் என பலரும் பல புகார்களையும், அறிக்கைகளையும் வங்காள வன்முறைக்கு எதிராக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் TMCயின் ஆதரவாளர்களோ இதை வெறும் வார்த்தைகளால் மட்டுமே மறுக்கிறார்கள். எந்தவித பதில் ஆதாரமும் தரவில்லை.

இத்தகைய நிகழ்வுகள் எங்களோடு பெங்காலோடு முடிந்து விடுமா அல்லது இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல் பரவுமா? இது தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  

With Inputs from: Samvada World 

Tags:    

Similar News