ஸ்டாலின், உதயநிதி வசிக்கும் தேனாம்பேட்டை வீடு குறித்து எழும் சர்ச்சைக்குரிய கேள்விகள்! யாருடைய பணம்? - புரியாத புதிர்!

Update: 2021-03-19 10:59 GMT

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குடும்பம் வசித்து வரும் பெரிய பங்களா யாருக்கு சொந்தமானது என்பது குறித்து 2016 முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

2016-ல் ஸ்டாலின் தன்னுடைய சொத்து மதிப்பு ₹5.8 கோடி என வேட்பு மனு தேர்தல் பத்திரத்தில் (affidavit) குறிப்பிட்டிருந்தார். இது எப்படி சாத்தியம் என பொது மக்கள் பலரும் 'அறப்போர் இயக்கம்' என்ற அமைப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். ஏனெனில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள பங்களாவின் தற்போதைய மதிப்பு மட்டுமே ₹20 கோடியை தாண்டும்.

The DMK's M. K. Stalin has declared assets of Rs 5.8 crores in his affidavit. Many of the public who read this...

Posted by Arappor - அறப்போர் இயக்கம் on Friday, 13 May 2016

இந்த சொத்து யாருடையது என அறிய அறப்போர் இயக்கம் முடிவு செய்தது. அந்த தேடலில் அந்த வீடு 'ஸ்னோ ஹௌசிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தால் 2007-ல் ₹11.62 கோடிக்கு வாங்கப்பட்டதாகத் தெரிய வந்தது. இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆவர்.

Image From: Arapoor Iyakkam FB page 

இந்த நிறுவனத்திற்கு இந்த பங்களாவை வாங்க எங்கிருந்து பணம் வந்தது? அங்கு தான் திருப்பம். உதயநிதி ஸ்டாலின் தான் இந்த கம்பெனிக்கு ₹10.34 கோடியை தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கி இருக்கிறார். இப்பொழுது இந்த ஸ்னோ ஹௌசிங் நிறுவனம் துர்கா ஸ்டாலினுக்கு இந்த வீட்டை வாடகை இல்லாமல் வசிக்கக் கொடுத்திருக்கிறது.

இதில் சுவாரசியமான விஷயமாக, இந்த நிறுவனம் இந்த வீடு வாங்கும் பணப்பரிமாற்றத்தை செய்ததை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை. 2007-இல் இந்த பணப் பரிமாற்றம் நிகழ்ந்த பொழுது, உதயநிதி ஸ்டாலின் எந்த படத்திலும் நடிக்கவில்லை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனமும் அப்பொழுது ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி சொத்து மதிப்பு 8.8 கோடி என்று கொடுத்துள்ளார். அவர் தங்கி இருக்கும்...

Posted by Arappor - அறப்போர் இயக்கம் on Wednesday, 17 March 2021

2006-இல் அவரது தந்தை ஸ்டாலினின் சொத்து மதிப்பு ₹1.4 கோடி மட்டுமே, எனவே உதயநிதி ஸ்டாலின் எப்படி 2007-இல் ₹10.3 கோடியை கடன் அளித்தார்? அது சரியான முறையில் வந்த வருமானமாக இருந்தாலும், இவ்வளவு சுற்றி வளைத்து தன்னுடைய பெற்றோர்களுக்காக தான் வைத்திருக்கும் நிறுவனத்திற்கே கடன் கொடுத்து வீடு வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் அறப்போர் இயக்கம் 2016-லேயே கேள்வி எழுப்பி இருந்தது.

தற்பொழுது தி.மு.க சட்டமன்ற வேட்பாளராக சேப்பாக்கத்தில் களம் இறங்கி இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தனது வேட்பு மனுவில் சித்தரஞ்சன் சாலை பங்களாவை தன்னுடைய முகவரியாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தான் இயக்குனராக இருக்கும் ஸ்னோ ஹௌசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி என்றால் இந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை அவர் கூற வேண்டும் என்று மறுபடியும் அறப்போர் இயக்கம் நேற்று கேள்வி எழுப்பியிருக்கிறது. ஐந்து வருடங்களாக இந்த கேள்வியை எழுப்பியும் தி.மு.க தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து தினமலர் பத்திரிகையிடம் பேசிய அந்த அமைப்பின் ஜெயராமன் வெங்கடேசன், "வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை; என் பெயரில் அந்த வீடு இல்லை" என சொல்லி, ஸ்டாலின் எளிதாக கடந்து போய்விடலாம். ஆனால், உதயநிதி அப்படி செய்ய முடியாது. வேட்பு மனுவிலேயே, சித்தரஞ்சன் சாலை பங்களா குறித்த விபரங்களை, அவர் சொல்லி இருக்கிறார். ஆகவே, அந்த, ₹10.30 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாக சொல்வதில் என்ன சிக்கல்?

நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தில் இருந்து தான், அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்து, அதன் மூலம் வீடு வாங்கப்பட்டது என்றால், அதை வெளிப்படையாக சொல்வதில், உதயநிதிக்கு என்ன தயக்கம்? பொது வாழ்க்கைக்கு வந்து, தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்த பின்னும், உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதில் என்ன பிரச்னை? தகவல்களை மறைக்க மறைக்க, மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும். சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி மக்களுக்கு மட்டுமாவது, உதயநிதி உண்மையை சொல்வாரா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தி.மு.க தரப்பில் இருந்து பதில் வருமா?

Tags:    

Similar News