இப்படியும் போஸ்டர் அடிப்போம்: சுவரொட்டியால் மிரள வைத்த பொதுமக்கள் - தீர்வு கிடைக்க போராட்டம்

நன்னிலம் பகுதிகளில் சுடுகாட்டை காணவில்லை. அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-07-07 01:45 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்து உபய வேதாந்தபுரம், ஊராட்சியில் உபய வேதாந்தபுரம், பொன்னரை, ஒன்பத்து வேலி, கருண கொள்ளை, சாமந்தாகுளம் ஆகிய ஐந்து ஊர்களுக்கு உபய வேதாந்தபுரம் பகுதியில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டினைக் கடந்த பல வருடங்களாக அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த சுடுகாட்டில் 25 அடி ஆழத்திற்கு தோண்டி மண் எடுத்துள்ளதாகவும் இதனால் மழைக்காலங்களில் அந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதாகவும் மேலும் மண் சரிவு ஏற்பட்டு சுடுகாட்டிற்கு பாதையில்லாத  சூழ்நிலை இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இந்த மனு தொடர்பாக எந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஐந்து ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், பூந்தோட்டம் மேனாங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் முக்கிய பகுதிகளில் 'சுடுகாட்டை காணவில்லை' என்று உபய வேதாந்தபுரம் ஊராட்சி மற்றும் ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் என்று அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தங்களது சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளதை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகிற பத்தாம் தேதி பேரளம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இது குறித்து நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் குறுகையில் தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன். இதுகுறித்து புவியியல் மற்றும் கனிமவியல் சுரங்கத் துறைக்கு  அறிக்கை அனுப்பியுள்ளேன்.  கிராம மக்களை அழைத்து அவர்களிடம் நன்னிலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றார்.


SOURCE :DAILY THANTHI

Similar News