Flex Fuel நோக்கி இந்தியா? பெட்ரோல், டீசலை நம்பி இருந்த காலம் மாறுது - புரட்டி போடும் தொழில்நுட்பம்!

Update: 2023-10-11 02:56 GMT

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிசக்தியை நோக்கி செல்ல உலகம் தயாராகி வருகிறது. இதனை முன் கூட்டியே உணர்ந்த மத்திய அரசு Flex Fuel எனப்படும் மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் மூலம் இயங்கும் Toyota Innova MPV காரின்  ஹைப்ரிட் மாடலை வெளியிட்டார். எத்தானால் ஹைபிரிட் இன்னோவா கார் வழக்கமான பெட்ரோல் மாடலைப் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அதில் 100% எத்தனால் எரிபொருளை நிரப்பி இயக்கும் வகையில் 2.0 லிட்டர் Flex  எரிபொருளுக்கான ஹைப்ரிட் எஞ்சின் இருக்கிறது.

எத்தனால் மூலம் எப்படி?

அமெரிக்காவில் 51% முதல் 83% எத்தனால் கொண்ட பெட்ரோல்-எத்தனால் கலவையை பயன்படுத்தி இயங்கும் கார்கள் சந்தையில் உள்ளது. 2021 வரை, அமெரிக்காவில் 27 மில்லியனுக்கும் அதிகமான Flex Fuel வாகனங்கள் இருந்தன. எத்தனால் என்பது கரும்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் பார்லி போன்ற விவசாய கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளாகும். பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது செலவு குறைந்தது. சுற்றுப்புற காற்றில் குறைவான நச்சுகளை வெளியிடுகிறது. விவசாயக் கழிவுகள் தவிர, இதர தாவர கழிவுகளில் இருந்தும் எத்தனால் தயாரிக்க முடியும். இதற்கான மிகப்பெரிய ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது.பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதனால் என்ஜின் செயல்திறன் அதிகரிக்கும். காரின் சக்தி மற்றும் செயல்திறனை மேம்படும். 

Flex Fuel நுட்பத்தை நோக்கி இந்தியா  

ஒரு வாகனத்தின் என்ஜின் பெட்ரோலுடன், 20%க்கும் அதிகமான எத்தனால் கலந்து பயன்படுத்துவது Flex Fuel தொழில்நுட்பம் என்று சொல்லப்படுகிறது. பிரேசில் 48 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் நாடாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை E20 (20% ethanol blended) எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியுள்ளன. 2025க்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே E20 எனப்படும் எத்தனால் கள்அந்த எரிபொருள் இந்தியாமுழுவதும் 3,300 இடங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு 2013-14ல் 1.53% ஆக இருந்து. மார்ச் 2023ல் 11.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி செலவில் 41,500 கோடி ரூபாய் குறைய வழிவகுத்துள்ளது.

புதிய வேலை வாய்ப்பு உருவாகும் 

எத்தனால் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டால் அதை எரிபொருளாக உருவாக்க புதிதாக பல வேலை வாய்ப்புகள் உருவாகும். பெரும்பாலும் சோளம், கரும்பு போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுவதால் அவற்றின் சாகுபடி மற்றும் விவசாயம் பெருகும். பெட்ரோல், டீசல் பெரும்பாலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சார்பாக இருக்கவேண்டும் என்றால் கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுவதும் குறைக்கவேண்டும். வருடம் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. முழுக்க முழுக்க எத்தனால் பயன்பாட்டுக்கு மாறினால் இந்த தொகை முழுவதும் இந்தியாவுக்கு மிச்சமாகும். 

Similar News