சிறப்புக்கட்டுரை: இந்திய - நேபாள உறவுகள்: தற்போதைய நிலையும் எதிர்காலமும்!

Update: 2021-07-17 03:25 GMT

நேபாள - இந்திய மக்களுக்கிடையிலான உறவும், இரு நாடுகளின் கலாச்சாரங்களுக்கும், மரபுகளுக்கும் இடையிலான பிணைப்பும் வலுவானது. இருதரப்பு உறவின் எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் விவாதிக்கலாம்.

முதலாவது, நேபாளத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு. இது நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளால் நன்கு ஆதரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.  

இரண்டாவதாக, நேபாள - இந்தியா பிணைப்பின் அடித்தளத்தை உருவாக்கும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பாரம்பரியம்.

இந்திய - நேபாள உறவுகள் உறுதியற்ற தன்மையை அடைந்ததற்கு, இரு நாடுகளை சேர்ந்த கடந்தகால கொள்கைக் குழுக்கள் தான் காரணம் என்பதற்கான வலுவான அறிகுறி உள்ளது. நேபாளத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இல்லையென்றாலும் மூத்த அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் நிர்வாக முறை ஆகியவை, பொறுப்பற்ற அறிக்கைகளாலும், பேச்சுக்களாலும் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளது.  

1947-ல் இந்திய சுதந்திரத்திலிருந்து 2008-ல் நேபாளத்தின் குடியரசு பிரகடனம் வரை இரு நாடுகளும் தங்கள் அரசியல் பயணத்தில் எப்போதும் ஒருவருக்கொருவர் துணை நிற்கின்றன. அண்டை நாடுகளின் நலனுக்கு இந்தியா எப்போதுமே முன்னுரிமை கொடுத்துள்ளது.

2006-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்ட UPA அரசாங்கம், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகள் மற்றும் ஏழு கட்சி கூட்டணி (SPA) இடையே 12 அம்ச ஒப்பந்தத்தைத் தொடங்கியது. ராயல் நேபாளி இராணுவத்திற்கு எதிராக இராணுவ வெற்றி சாத்தியமில்லை என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகள் கருதினர். 2002-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, மன்னர் ஞானேந்திரர் நிர்வாகத்திற்கு தலைமை தாங்கியதால் SPA அதிருப்தி அடைந்தது. மன்னராட்சிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை இந்தியாவின் ஆதரவுடன் தீட்டினர்.

இந்தியாவில் BJP அரசாங்கம் நேபாளத்தின் 2015 அரசியலமைப்பில் திருப்தியடையவில்லை; பிரதமர் மோடியின் தூதர் காத்மாண்டுவுக்கு சென்றார். அரசியல் கட்சிகளை, முக்கியமாக நேபாளி காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகியோரிடம் சென்று, சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இடமளித்து, அவர்களின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாதேசி, ஜனஜாதிகள், தாருஸ் மற்றும் ராஸ்ட்ரியா பிரஜாதந்திர கட்சி ஆகியவை 20 செப்டம்பர் 2015 அன்று அறிவிக்கப்பட்ட நேபாள அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.  

நேபாளத்தின் மூலோபாய இருப்பிடம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போட்டி மற்றும் இமயமலை எல்லைகளில் இந்தியா மற்றும் சீனாவின் மோதல்கள் காரணமாக கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவும் இந்த உறவுகளின் உறுதியற்ற தன்மைக்கு ஒரு காரணமாக அமைகிறது.

இந்திய நேபாள உறவுகளில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்களையும் உறுதித் தன்மையும் கொண்டுவருவதற்கு நான்கு காரணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். முதலில் நேபாளத்திற்கான இந்திய வெளியுறவுக் கொள்கை நன்றாக திட்டமிடப்பட்டு இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, இருநாட்டு மக்களிடையிலான உறவை கலாச்சார பிணைப்பின் மூலம் வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக அந்நாட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகு உதவி செய்ய முயற்சிகளை எடுக்க வேண்டும். கடைசியாக இருநாடுகளுக்கு இருக்கும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள கூட்டு திட்டங்களை தீட்ட வேண்டும்.

இந்தியா அண்டை நாடுகளின் நலன்களுக்கு எப்பொழுதுமே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது. இருநாடுகளும் அருகில் அருகில் இருப்பதாலோ அல்லது மக்களுக்கு இடையிலான கலாச்சார உறவுகள் இருப்பதால் மட்டுமல்ல. இந்திய-நேபாள உறவுகள் அதையும் தாண்டி ஆழமானது.

Tags:    

Similar News