வசூலைக் குவிக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் பள்ளி! பெற்றோர் வேதனை!
வசூலைக் குவிக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் பள்ளி! பெற்றோர் வேதனை!
சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் செயின்ட் பிரிட்டோ அகாடமி பள்ளியில் கட்டணக் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பள்ளி, நடிகர் விஜயின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமானது என்பதால் சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா சூழ்நிலையால் இந்த வருடம் முதல் இரண்டு மாதங்களைத் தவிர்த்து பள்ளிகள் இயங்கவே இல்லை என்ற நிலையில், ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி LKG மாணவர்களுக்கு ₹67,000 கட்டணம் வசூலித்திருக்கின்றனர். SMR கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சேவை நிறுவனம் நடத்தி வரும் சேவியர் பிரிட்டோ அதன் மூலம் சேவை மனப்பான்மையுடன் கல்வி வழங்கும் நோக்கில் இந்த பள்ளியை நடத்துவதாகக் கூறி வருகிறார்.
ஆனால் அதற்கு மாறாக, பள்ளிகளே இயங்காத போதும் வழக்கமாக வாங்கும் அதே கட்டணத்தைக் கட்டுமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோரை வற்புறுத்தி இருக்கிறது. இது போக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மேலதிக கட்டணம் வசூலித்துள்ளனர். வசதியான பெற்றோர் கட்டணத்தை செலுத்தி விட்ட நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததாலும், குறைவான வருவாயாலும் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்துள்னர்.
அவர்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்த முடியாதவர்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, பெற்றோர் பள்ளி மீது முறையாக புகார் அளித்துள்ளனர்.
நான்காம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு 3 பருவங்களுக்கான கட்டணம் என்று சிறப்புக் கட்டணம், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, மற்ற பிற கட்டணங்கள் என ₹90,000 வசூலித்துள்ளனர். ஒரு புறம் பள்ளி அனுப்பிய கட்டண விவரத்தை பெற்றோர் ஆதாரமாகக் காட்ட, பள்ளி நிர்வாகமோ 50% சலுகை வழங்கியும் கட்டணத்தை செலுத்தாததால் தான் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டதாகக் காரணம் கூறியுள்ளது.