கண்ணை கசக்க தேவையில்லை - பெண்களின் வரலாற்றை மாற்றி எழுதிய பிரதமரின் திட்டம்!

Update: 2023-12-03 04:15 GMT

உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகளவில் சுமார் 240 கோடி மக்கள் மண்ணெண்ணெய், பயோமாஸ் மற்றும் விறகுகளை பயன்படுத்தும் அடுப்புகளை சமையலுக்கு நம்பியுள்ளனர். இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. மாசு இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சமையல் மூலமான காற்று மாசுபாடு பிரச்சினையை நிவர்த்தி செய்யவும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2016 மே 1ல் தொடங்கப்பட்டது

கடந்த காலங்களில், இந்தியாவில் உள்ள ஏழை மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விறகு, நிலக்கரி மற்றும் சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தினர். இதனால், அவர்கள் சுகாதார பிரச்னைகளையும் எதிர்கொண்டனர். இந்நிலையில், பிரதமரின் உஜ்வாலாத் திட்டம் பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டியுள்ளது. மேலும், உஜ்வாலா திட்டம் பெண்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் விறகு அல்லது எரிபொருளை சேகரிக்க பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

எல்பிஜி பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள்

பஹல் திட்டத்தின் மூலம் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதற்கு பதிலாக, அவை சந்தை விலையில் விற்கப்பட்டன. அதற்கான மானியம் நேரடியாக மின்னணு முறையில் தனிநபரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது. இதன்மூலம், தேவையற்ற கணக்குகள் குறைந்ததுடன், வணிக நோக்கங்களுக்காக வீட்டு சிலிண்டர்களை பயன்படுத்துவதும் தடுக்கப்படுகிறது. மானியங்களை வலுக்கட்டாயமாக நீக்குவதற்குப் பதிலாக, மக்கள் தாமாக முன்வந்து தங்கள் மானியங்களை ஒப்படைக்க ஊக்குவிக்கப்பட்டனர். விரிவான விளம்பரத்தின் மூலம், மில்லியன் கணக்கான மக்கள் மானியங்களை மனமுவந்து விட்டுக்கொடுத்தனர். இது எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவதில் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியை திருப்பிவிட உதவியது. 2020ல் கொரோனா லாக்டவுன் போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் இலவச ரீஃபில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 14.17 கோடி சமையல் எரிவாயு நிரப்புதலுக்காக பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுக்கு ரூ.9670.41 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா யோஜனா திட்டம் 

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். 2014ம் ஆண்டு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வோர் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில், 2023ல்  32 கோடியாக அதிகரித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.400 வீதம் 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா  திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளை வழங்குவதன் மூலம் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும். தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளது. 

யார் விண்ணப்பிக்கலாம்?

கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயது நிரம்பிய பெண்கள் இந்த திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு,வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வீட்டு முகவரி சான்று ஆகியவற்றை கொண்டு இத்திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களும் இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

ரேஷன் கார்டு

ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

பெயர், தொடர்பு விவரங்கள்

வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை எண் போன்ற அடிப்படை விவரங்கள்.


Similar News