ராமர் பட்டாபிஷேகம்... ராமர் பாதம் பட்ட மண் அனுப்பும் பரிசுகள்....!

Update: 2024-01-21 00:46 GMT

ராமர் நடந்த மண்ணில் இருந்து அயோத்திக்கு செல்லும் மரியாதை....


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இதனால் ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திக்கும் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு ஒரு முக்கிய தொடர்பு இருப்பதாக பிரதமர் மோடி அவ்வப்போது கூறி வருவார். இந்த தொடர்பை அயோத்தி கோவிலின் கட்டுமான பணிகளிலும் பிரதிபலிக்க உள்ளது, அதாவது தமிழகத்திலிருந்து அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் சென்றுள்ளது.

முதலில் ராமர் கோவிலுக்கு தேவையான 12 ஆலயமணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு மணிகளை வழங்க உள்ளார் அதற்கான அனுமதியை அவர் பெற்றவுடன் தமிழகத்தின் நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் அவர்களிடம் அயோத்தி ராமர் கோவிலுக்கான பணி செய்யும் பணியினை வழங்கியுள்ளார். 


இந்த ஆர்டர் கிடைத்தவுடன் மொத்தம் 25 பேர் ஒரு மாத காலமாக இரவு பகலாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வேண்டிய மணிகளை செய்யும் பணியை மேற்கொண்டு முடித்துக் கொடுத்துள்ளனர். ராமர் கோவிலுக்கான மணிகள் மொத்தமும் 1200 கிலோ எடை கொண்டதாகவும் இம்மணிகளுக்கு தேவையான காப்பர், வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்கள் அனைத்தையும் ராஜேந்திரன் நாயுடு அவர்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நிறைவு பெற்ற மணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்த பிறகு பெங்களூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பிறகு அங்கிருந்து அயோத்திக்கு இந்த மணிகள் அனைத்தும் கொண்டு சென்று அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் இருந்து ஒரு தனியார் கட்டிடக்கலை குழுவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டறை அமைத்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வேண்டிய அனைத்து கதவுகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பயின்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாமல்லபுரத்தில் மரத்தின் கலை வேலைபாடுகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 


இவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் செய்தியை அறிந்த உடனே அப்பணியை முன்னெடுத்து நடத்திக் கொண்டுவரும் ராம ஜென்ம பூமி தீர்க்க கேஷத்திர அறக்கட்டளையிடம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரில் சென்று ராமர் கோவிலுக்கான கதவுகள் செய்யும் பணியை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளைக் குறித்து எடுத்து கூறியுள்ளார். இதனை அடுத்து ராமர் கோவிலின் திட்ட படத்தை ரமேஷ் அவர்களிடம் கொடுத்த கோவில் நிர்வாகம் கோவிலின் சிறிய வடிவத்தை கேட்டுள்ளனர். அதனால் 160 அடி உயரமுள்ள ராமர் கோவிலை 8 அடி மாதிரியாக மரத்தில் உருவாக்கி கொடுத்துள்ளது அந்நிறுவன குழு. அதற்குப் பிறகு ராமர் கோவிலின் கதவுகள் செய்யும் பணிகள் எங்களுக்கு கிடைத்ததாகவும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் கூறியுள்ளார். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு வந்ததாகவும் கோவிலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தற்காலிக தச்சுப்பட்டறை அமைக்கப்பட்டு கோவிலுக்கு தேவையான 48 கதவுகளை ஏழு மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய சவாலான பணியை மாமல்லபுரத்தை சேர்ந்த ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இப்படி ஆன்மீக ரீதியாக தமிழகத்திற்கும் அயோத்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அயோத்தியின் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளிலும் தமிழரின் பங்கு இருக்கிறது என்பது தமிழர்கள் அனைவரையும் பிரம்மிப்போடு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News