உலகத் தமிழர்களின் மனதை உருக்கிய மரணச் செய்தி - பிரதமர் மோடி, அண்ணாமலை இரங்கல்!

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காலமானார். யார் இந்த இரா.சம்பந்தன்? ஒரு பார்வை.

Update: 2024-07-01 10:28 GMT

இராஜவரோதயம் சம்பந்தன் பிப்ரவரி ஐந்து 1933 ல் பிறந்தார் . இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும்,  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி  தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரையும் பின்னர் 2001 முதல் இறக்கும் வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்:

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ.இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அரசியல் ஈடுபாடு:

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கருப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.

2001 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பும் தலைவர்களின் இரங்கலும்:

இரா. சம்பந்தன் 2024 சூன் 30 இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 91-ஆவது அகவையில் காலமானார். இவரது இறப்பிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"இலங்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவரான, ஐயா இரா.சம்பந்தன் அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர். ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் குடும்பத்தினருக்கும், ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி" . இவ்வாறு அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை அவர் எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். அவரது இறப்பு இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவர்களது நண்பர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்".இவ்வாறு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


SOURCE :NEWS 

Tags:    

Similar News