நீட் தேர்வு தான் அரசு பள்ளி மாணவர்கள் பலரை டாக்டர் ஆக்கியது : அண்ணாமலையின் பதிவுகள்

Update: 2024-07-03 17:24 GMT

நீட்டில் சாதனை புரியும் தமிழக மாணவர்கள்:

12 படிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல தமிழக மாணவர்கள் நீட்டில் தங்களது திறமைகளை காட்டி தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நடந்து முடிந்த நடப்பாண்டிற்கான நீட் நுழைவு தேர்வில் முடிவுகளில் கடந்த ஆண்டை விட அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக 67 பேர் 720/ 720 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர். அவர்களின் ஏழுபேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.70 லட்சம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆண்டு 78,693 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 10,733 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றதோடு, மேலும் நான்கு தமிழக மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து தகுதி பெற்றனர். 

97% மாநில பாடத்திட்ட வினாக்கள்:

மேலும், 2020 இல் 17,101; 2021 இல் 19,868, 2022 இல் 21,965; 2023 இல் 30,536; 2024இல் 36,333 என தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குவோம் என தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. முன்னதாக, நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தை தவிர சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கேள்விகள் தான் கேட்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை திமுக தரப்பு முன்வைத்து நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், நீட் தேர்வில் கேட்கப்படுகின்ற கேள்விகளில் 97 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது என்று கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே நீட் விலக்கு என்பதை திமுக தனது அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தி வருகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடரும் திமுக:

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு வந்த பிறகு தான் கிராமப்புறங்களில் இருந்து அதிக மாணவ மாணவிகள் டாக்டராகியுள்ளனர் என்று தனது எக்ஸ் வலைதளத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். அதாவது, நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 


நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? என கேள்வி எழுப்பி உள்ளார். 

அதிகரிக்கும் கிராமப்புற மாணவர்களின் நீட் தேர்ச்சி:

அதுமட்டுமின்றி இதற்கு முன்பாக தனது என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடிய பொழுது கிராமப்புறங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த தகவலையும் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில், 2021ஆம் ஆண்டு கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களான செங்குளம் பள்ளி மாணவர் சின்னத்துரை, தோகைமலை பள்ளி மாணவர் சிவகணேசன், கடவூர் பள்ளி மாணவி ஆர்த்தி, சின்னதாராபுரம் பள்ளி மாணவி அகல்திகா, குளித்தலை பள்ளி மாணவி நர்மதா ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு முதலிடத்தை பிடித்த கரூர் மாணவர் பிரபு வெகுவிரைவில் மருத்துவராகவுள்ளார். 

ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்கப்போறேன் என்று கிளம்பியிருக்கிறார் உதயநிதி. மக்கள் ஆதரவு இல்லாததால், அவரால் 14 நாட்களில் 3 லட்சம் கையெழுத்து கூடப் பெறமுடியவில்லை. திமுகவினரே கையெழுத்து இடவில்லை. உதயநிதிக்கு நீட் தேர்வு தேர்ச்சி பெறுவது பற்றி சந்தேங்கங்கள் இருந்தால் எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, பள்ளி மாணவர்களிடம் சென்று தற்கொலை பற்றி பேசுவது, பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கையெழுத்து இடச்சொல்வது போன்ற கீழ்த்தரமான அரசியலை உதயநிதி கைவிடவேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி, தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று திமுகவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News