தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல், சாதி அடிப்படையிலான கொலைகள்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

Update: 2024-07-06 14:54 GMT

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சார வீடியோவில் பேசும் போது, "சட்டம் மற்றும் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன், தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள். நிச்சயம் எங்களது ஆட்சியில் தண்டிக்கப் படுவார்கள்" என்றெல்லாம் கடந்த கால வீடியோவில் பேசி இருப்பார். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகத்தில் சாதி, அரசியல் உள்நோக்கங்களால் அடிக்கடி நடத்தப்படும் கொடூரமான கொலைகளின் சம்பவங்கள் நிச்சயம் நமக்கு கவலையை தான் தருகிறது. இச்சம்பவங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேலாண்மையில் திமுக அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போது திமுக ஆட்சியில் உள் நோக்கத்துடன் நடந்த கொடூரமான கொலை சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

சம்பவம் 1:

சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 அன்று மாலை சென்னை பெரம்பூர் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அரிவாள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த நபர்களால் தாக்கப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அவரது குடும்பத்தினர், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் 2:

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் 20 மே 2024 அன்று, பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள உணவகம் அருகே பட்டப்பகலில் அடையாளம் தெரியாத கும்பலால் தீபக் ராஜா என்ற தலித் பிரமுகர் கொடூரமாக தாக்கப்பட்டார். ஆறு பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு உடனடியாக உயிரிழந்துள்ளார். பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் விதிகள் உட்பட சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

சம்பவம் 3:

ஜூலை 3, 2024 அன்று, சேலத்தில் உள்ள தாடகப்பட்டியில் அதிமுக நிர்வாகி எம்.சண்முகம் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டார். அதிமுக கிளைச் செயலாளராகப் பணியாற்றிய சண்முகம், தாகப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதி அருகே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சண்முகத்தின் மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் திமுக 55வது வார்டு கவுன்சிலர் தனபாக்கியம், அவரது கணவர் சதீஷ் மற்றும் 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சம்பவம் 4:

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங்கின் உடல் கருகிய நிலையில் 2024 மே 4 அன்று அவரது பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மகன் கருத்தய்யா ஜாஃப்ரின் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை காணவில்லை என்று உவரி போலீசில் புகார் செய்தார். ஜெயக்குமாரின் திடீர் மற்றும் மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பரவலான அதிர்ச்சியையும், கூச்சலையும் கிளப்பியது.

சம்பவம் 5:

மற்றொரு சோகமான சம்பவம், திருநெல்வேலி பா.ஜ.க பொதுச்செயலாளர் ஜெகன் பாண்டியன், பொது விவகாரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் தீவிரமாக ஈடுபடுபவராக அறியப்பட்டவர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள மூலிகுளம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாதி மற்றும் அரசியல் அடிப்படையிலான காரணங்களால் பல நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு இதுதானா? திராவிட மாடல் ஆட்சியில் சட்ட ஒழுங்கின் நிலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? இவற்றை உடனே கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை எழுப்பி வருகிறார்கள்.

Input & Image courtesy:The Commune News

Tags:    

Similar News