தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்த முயற்சியா? டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன்றில் கேட்கப்பட்ட சர்ச்சை குறிய கேள்வி!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பல கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

Update: 2024-07-17 02:06 GMT

ஆஷின் ஆதிக்கம்:

செங்கோட்டையை சேர்ந்த இளம் போராட்ட வீரர் வாஞ்சிநாதர். இவர் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இளமைக் காலத்திலேயே உயிரிழந்தவர். அதாவது இந்தியா ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த பொழுது திருநெல்வேலியின் கலெக்டராக 1907 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆஷ் இந்திய மக்கள் மீதும் குறிப்பாக மக்களிடையே சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வந்த சுதேசி கப்பலை செயலிழைக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டான். அதுமட்டுமின்றி தமிழக மக்கள் பலரை பலவிதமான முறையில் கொடுமைப் படுத்தியும் வந்துள்ளான். இதனை அடுத்து 1908 இல் ஆங்கிலேய அரசு வ.உ.சி, பத்மநாப ஐயங்கார், சுப்பிரமணியம் சிவா ஆகியோரை கைது செய்தது. அவர்களின் கைதை கண்டித்து பெரிய ஊர்வலம் நடந்த பொழுது, அதை கலைப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தினான் ஆஷ். அதுமட்டுமின்றி கைது செய்தவர்களையும் புரட்சியாளர்கள் என்று முத்திரை குத்தி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையை அளிக்க வகை செய்தான். 

ஆஷை கொன்ற வாஞ்சிநாதன்:

ஆஷின் இந்த நடவடிக்கை நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி வந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஆஷை கொல்வதன் மூலம் நம் சுதந்திரத்திற்கான முதல் படியை முன்வைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆஷை சுட்டுக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்பொழுது பலரும் நான் நான் என போட்டி போட இறுதியில் அனைவரின் பெயரையும் துண்டு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவரை வாஞ்சிநாதன். இதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த வாஞ்சிநாதன் 1911 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அன்று கொடைக்கானல் சென்று கொண்டிருந்த ஆஷை மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அதுவும் தன்னுடைய முகம் யாருக்கும் அடையாளம் தெரியாத வகையில் தன் வாய்க்குள் துப்பாக்கிய வைத்து சுட்டுக் கொண்டார். வாஞ்சிநாதனின் இந்த வீரச்செயல் தமிழகத்தை தாண்டியும் எதிரொலித்தது. இதன் மூலம் ஆங்கிலேயர் அரசுக்கு அடிமட்டமும் ஆட்டம் கண்டது. 

வாஞ்சிநாதன் குற்றவாளியா? தேசபக்தரா?

இப்படி சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் படியை எடுத்து வைத்த வாஞ்சிநாதன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்பட்டாலும், தற்போது நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தேசபக்தர். இவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த போராட்ட வீரர் தமிழகத்தை சேர்ந்தவர்தான், அவரை ஒட்டுமொத்த நாடு கொண்டாடுவதை விட தமிழகம் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதையும் மறந்து விட்டு திமுக அரசு சமீபத்தில் நடந்த (TNPSC Group 1) குடிமைப் பணிகள் தேர்வில் வாஞ்சிநாதன் குறித்த ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்டுள்ளது. 


அதாவது ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது இதற்கு விடை வாஞ்சிநாதன் தான், ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றவாளியாக பார்க்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேசபக்தர்களாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் போற்றி வணங்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரை குற்றவாளி என குறிப்பிட்டு இந்த திமுக அரசு கேள்வியை முன்வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆஷை சுட்டுக்கொன்ற தேசபக்தர் யார்? ஆஷை சுட்டுக்கொன்ற தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் யார்? என பலவகையில் இந்த கேள்வியை அமைத்திருக்கலாம். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றவாளிகள் என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் குற்றவாளிகாளாக பார்க்கப்பட வேண்டுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். 

எதிர்காலத்தை தவறாக வழி நடத்தும் முயற்சி! 

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான யுனெஸ்கோ அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் சாக்கரடீஸ் என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்? என்ற ஒரு கேள்வியும் குடிமைப் பணிகள் தேர்வில் இடம் பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் இந்த விருதானது அன்றைய முதல்வரான கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யூனஸ்கோ அமைப்பின் எந்த ஒரு நபரின் முன்னிலையிலும் இந்த விருது வழங்கப்படவில்லை.


இது குறித்த ஆவணங்களும், சான்றுகளும் அதிகமாக வெளிவந்து, அதிகமாகவே இது பற்றிய பேச்சுகள் இருந்து வருகிற நிலையில், மீண்டும் இப்படி ஒரு கேள்வி குடிமை பணிகள் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இப்படி தவறான கேள்விகள் கேட்கப்பட்டு வருங்கால தலைமுறையினருக்கு தவறான கருத்துக்கள் மற்றும் தகவல்களை படிக்க வைத்து தவறான பாதையில் வழி நடத்திச் செல்ல இந்த அரசு திட்டமிடுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Tags:    

Similar News