கழுத்துக்கு கீழே உடல் செயலிழந்த போதிலும் சமூகப்பணி - தமிழகத்தில் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது!

President Ram Nath Kovind presented Padma awards to 73 individuals

Update: 2021-11-09 02:53 GMT

2020ம் ஆண்டுக்கான 4 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 61 பத்ம ஸ்ரீ விருதுகளை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் நேற்று (நவம்பர் 8ம் தேதி) வழங்கினார்.

இதில் தமிழகத்தில் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கான இவரின் பங்களிப்பிற்கு தற்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அமர் சேவா சங்கத்தினை 1981 ஆம் வருடம் அமர் சேவா சங்கத்தைத் தொடங்கி, கடந்த 38 வருடங்களாக பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் ஒருங்கிணைந்து வாழ பணியாற்றி வருகிறார். மேலும் அதன் தலைவராகவும் திகழ்கிறார்.

சமூக சேவையின் பின்னணி:

1975 ஆம் ஆண்டு நடந்த கடற்படைக்கான தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு அவருடைய உடலின் சில பகுதிகள் செயல்படவில்லை. தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் சிரமங்களைப் போக்க எண்ணி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள், போன்ற மிகவும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

ராமகிருஷ்ணனின் கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

வாழ்க்கை பயணம்:

1954 ஆம் ஆண்டு சேலத்தில் சிவசுப்ரமணியன் சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வியைப் பயின்று, ஆயகுடிக்குப் பின்னர் வந்தடைந்தார். 1970களில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். 1975 ஜனவரி 10 இல் நான்காமாண்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் போது பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். அப்போது நடந்த உடல் தகுதிச் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கழுத்திற்குக் கீழ்ப் பகுதிகள் செயலிழந்துவிட்டன.அதன் பிறகும் இடைவிடாமல் சமூக சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப்போன்ற ஊடக வெளிச்சம் படாத ஆளுமைகளையும் கண்டறிந்து கௌரவிப்பதில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.







Similar News