"எலி ஓடும் பிரியாணி, அழுகிய சிக்கன் ஷவர்மா" - லாபவெறியர்களால் பலியாகும் அப்பாவி மக்கள்

கேரளாவில் தொடர்ச்சியாக அசைவ உணவகங்களில் பொதுமக்கள் இறைச்சி சாப்பிட்டு உடல்நிலை சீர்கேடாவதும்,

Update: 2023-01-11 10:53 GMT

கேரளாவில் தொடர்ச்சியாக அசைவ உணவகங்களில் பொதுமக்கள் இறைச்சி சாப்பிட்டு உடல்நிலை சீர்கேடாவதும், சிலர் பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கேரளாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்டு ஒரு பெண் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. உடனே கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததில் பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சுவைக்காகவும், பார்வைக்காகவும் செயற்கை ரசாயன பொடி கலப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வளவு இருந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுகள் தவறியதால், நடவடிக்கை எடுப்பதை அலட்சியமாக விட்டதால் தற்பொழுது மீண்டும் மக்களுக்கு ஆரோக்கியக் குறைவும், உயிரிழப்புகளும் ஏற்படும் அவலம் தொடர்கிறது.

கேரள மாநிலம் இடுக்கியில் நெடுங்கண்டம் பகுதியில் உள்ள கோமல் ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் லிசி மத்தாய் அவரது மகன் திபின் மற்றும் அவரது மகன் மேத்யூ பிபின் ஆகியோர் மூவர் ஆபர் ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் ஆன்லைன் மூலம் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர், பின்பு அவர்கள் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அந்த உணவகத்தில் கெட்டுப்போன சிக்கனில் செய்த சவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்டதால் இரவில் அவர்களுக்கு வாந்தி பேதி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர்கள் விஷத்தன்மை கொண்ட உணவை உண்டிருப்பதாக தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்தனர், அப்போது அந்த உணவகம் மிகவும் அசுத்தமாக இருப்பதாக கண்டுபிடித்து அதிகாரிகள் அந்த உணவகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவமாக கேரளத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ பார்வதி, கல்லூரி மாணவியான இவர் புத்தாண்டு தினத்தை ஒட்டி அவரது குடும்பத்தினர் ஆன்லைன் வாயிலாக பிரியாணி வாங்கியுள்ளனர். அந்த பிரியாணியை அனுஸ்ரீ பார்வதி மற்றும் அவரது தாய் அம்பிகா, தம்பி ஸ்ரீகுமார் ஆகியோர் சாப்பிட்டவுடன் அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் குணமடைந்தாலும் அனுஸ்ரீ பார்வதி உடல்நிலை மட்டும் மிகவும் மோசமானது. இதை தொடர்ந்து கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கெட்டுப்போன உணவு என்பதால் அவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு உயிர் பலியாகும் அளவிற்கு வீரியம் உள்ளது எனவும் அறிக்கை வெளியானது.

மேலும் விசாரணையில் அதே உணவகத்தில் அன்றைய தினம் பிரியாணி சாப்பிட்டவர்களில் 20 பேருக்கு உடல்நிலை பாதிக்க ஏற்பட்டதாகவும் பிரியாணி சமைக்க கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் காசர்கோடு பகுதியில் கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறங்கி ரைடு நடத்தியதில் பல அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி என தெரியக்கூடாது என்பதற்காக சுவையூட்டிகள், வாசனை பொடிகள் போன்றவற்றை உணவகங்களில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக எர்ணாகுளத்தில் உள்ள ஹோட்டலில் பிரியாணியில் பூரான்கள் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். மேலும் கிச்சன்களில் சமைக்கப்பட்ட பிரியாணி உணவுகளில் எலிகள் நடமாடுவதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் கேரள முழுவதும் இதுபோல் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த 139 ஹோட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மற்றொரு சம்பவமாக கேரளாவின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த செவிலியர் ரேஷ்மி என்பவர் ஓட்டலில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் கடந்த ஒரு வாரம் முன்பு உயிரிழந்தார். கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டலில் விற்கப்படும் கெட்டுப்போன உணவு வகைகள் சாப்பிட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து கூறும் பொழுது, 'தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' என தெரிவித்துள்ளார், ஆனால் இது தொடர்கதை ஆகி வருகிறது.

தமிழகத்திலும் இதனை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடுமையான ரெய்டு மற்றும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தமிழகத்திலும் இதுபோன்று உணவினால் மக்கள் பாதிப்படைவது குறையும். லாபத்திற்காக மக்கள் உயிர் என்று கூட பார்க்காமல் கெட்டுப்போன இறைச்சி, விதிமுறைகளை பின்பற்றாமல் சுகாதாரமற்ற உணவகங்களை நடத்தி வருவது அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அரசு கடிவாளத்தை இறுக்கி இதுபோன்ற லாப வெறியர்களை கட்டுப்படுத்தாத வரை அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது உறுதிதான்.

Similar News