என்ன ஆனது ஜாக் மா விற்கு? சீன அரசு எந்த அளவிற்கு செல்லும்? முழுப் பின்னணி.!
என்ன ஆனது ஜாக் மா விற்கு? சீன அரசு எந்த அளவிற்கு செல்லும்? முழுப் பின்னணி.!
சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கோடீஸ்வரருமான ஜாக் மா காணாமல் போய்விட்டதாக சில நாட்களாக தலைப்புச் செய்திகள் அடிபட்டு வந்தது. அவருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகவும், தாங்கள் என்ன செய்ய முடியும் என்று காட்டி, ஜாக் மாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கும் வகையிலும் எதுவும் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது குறித்தும் பல கேள்விகள் உலா வந்தன.
இக்கட்டுரையில் இந்நிகழ்வின் பின்னணி, ஏன் இவ்வாறு நடந்தது? ஜாக்மா எப்படி இருக்கிறார்? சீனாவின் இந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து காணலாம்.
கோடீஸ்வரரான ஜாக் மா சீனாவில் ஒரு அரிதான பிரபலம். தன்னுடைய மனதில் பட்டதை பேசி எல்லைகளை விரிவாக்கம் செய்ய முயலும் ஒரு தொழில்முனைவர். இதன் காரணமாக சீனாவிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவருடைய அலிபாபா நிறுவனத்திற்கு ஆதரவும் பணபலமும் பெருகி வந்தது.
ஆனால் தற்போது இதே காரணங்களினால் தான் தன்னுடைய தொழிலுக்கும் தன் உயிருக்கும் கூட ஜாக்மா ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மையான பிரச்சனை கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஆரம்பித்தது.
ஷாங்காயில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய ஜாக் மா சீனாவின் கட்டுப்பாட்டாளர்களை (regulators) விமர்சித்தார். மாவின் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ANT உலகின் மிகப் பெரிய ஆரம்ப பொது வழங்கலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில், சீன அதிகாரிகள் புதிய கண்டுபிடிப்புகளை தடுப்பதாக மா குற்றம் சாட்டினார். அந்நாட்டு வங்கிகள் அடகு கடை போன்ற மன நிலையில் நடந்து கொள்வதாகவும் விமர்சித்தார். அவர் குற்றம்சாட்டிய சில தினங்களிலேயே சீன அரசின் பதிலடி ஆரம்பித்தது.