மறுபடியும் இந்து நாடாகுமா நேபாளம்? அதிகரித்து வரும் போராட்டங்களும், பெருகி வரும் ஆதரவும்.!
மறுபடியும் இந்து நாடாகுமா நேபாளம்? அதிகரித்து வரும் போராட்டங்களும், பெருகி வரும் ஆதரவும்.!
நேபாள பிரதமர் சர்மா ஓலி திங்களன்று (ஜனவரி 25) புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறப்பு பூஜைகள் வழங்கினார். இதன் மூலம் ஏற்கனவே கொந்தளிப்பான அரசியல் நெருக்கடியில் இருக்கும் நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இந்துக்களை ஈர்க்கும் இந்தக் கோவிலுக்கு வருகை தந்த நேபாளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பிரதமர் ஓலி ஆவார்.
இவரது முன்னோடிகளான புஷ்ப கலாம் தஹால், மாதவ் குமார் நேபாளம், பாபுரம் பட்டரை, ஜலா நாத் கானல் மற்றும் மன்மோகன் ஆதிகாரி ஆகியோர் எந்த இந்து கோவிலுக்கும் சென்றதில்லை.
அரசியலமைப்பு மன்னராட்சியை மீட்டெடுக்கவும், இந்து நாடாக நேபாளத்தை மறுபடி மாற்றக் கோரும் போராட்டக்காரர்களுடன் ஓலி சேர்வாரா என இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (NCP) உள்ள தஹால் மற்றும் பிற தலைவர்களுடன் பிரச்சினை வரத் தொடங்கியதில் இருந்து ஓலி மன்னராட்சி ஆதரவாளர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.
நேபாளத்தில் தொடர்ந்து மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. மன்னராட்சியை மறுபடி கொண்டு வந்து, நேபாளம் இந்து நாடாக மறுபடி மாற அந்நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யக் கோருகிறாரகள்.
ஓலியும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும், மன்னராட்சி மற்றும் இந்து சார்பு 'ராஸ்திரியா பிரஜாதந்திர கட்சியின்' (RPP) தலைவர்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த ஓலியின் நடவடிக்கைக்கு RPPயின் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
ஓலி எப்போதும் RPPயுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார். அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரை ஓலி முதலில் பிரதமராக இருந்த காலத்தில், RPP தலைவர் கமல் தாப்பாவை தனது துணை பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் நியமித்திருந்தார்.