கல்வியை தொடங்கும் குழந்தைகள் இந்த கோவில் சென்று வந்தால் நிகழும் ஆச்சர்யம்!

Update: 2022-03-15 01:42 GMT

கோவில்களுக்கென்று பிரத்யேக சிறப்பம்சங்கள் என்று ஏதேனும் இருக்கும். ஆனால் தமிழகத்தின் கோவில்களிலேயே மிகவும் தனித்துவமானதாக இருப்பது கூத்தனூர் சரஸ்வதி கோவில். காரணம் தமிழகத்தில் அமைந்திருக்கும் ஒரே பிரத்யேக கோவில் இது தான். தனிப்பட்ட சந்நிதிகள் மற்ற கோவில்களில் இருக்கலாம். ஆனால் பிரதான தெய்வாமாக கொண்டிருக்கும் ஒரே கோவில் தமிழகத்தில் இங்கு மட்டுமே உண்டு.

சரஸ்வதி கோவில் அமையப்பெற்றிருக்கும் ஊரான கூத்தனூர் என்ற பெயரே ஒட்டக்கூத்தரின் பெயரில் அமையபெற்றதாம். ஒட்டக்கூத்தர் தனக்கு கவிப்பாடும் வல்லமை வேண்டும் என கோரி கடும் பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்ததன் பலனாக அவரை வரகவி ஆக்கினார் என்பது வரலாறு.

அதுமட்டுமின்றி எங்குமே சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாத போது, இங்கு மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்ததன் பின் சொல்லப்படும் வரலாறு யாதெனில், ஒரு முறை சரஸ்வதி தேவிக்கும் பிரம்ம தேவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இருவரும் ஒருவருக்கொருவர் வழங்கி கொண்ட சாபத்தின் பயனாய் பூலோகத்தில் சோழ நாட்டில் உள்ள புண்ணிய கீர்த்தி மற்றும் சோபனை என்ற தம்பதியருக்கு பிரம்ம தேவர் பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், ஸ்ரதா என்ற பெயரில் சரஸ்வதி தேவி மகளாகவும் பிறந்தனர். அவர்களுக்கு திருமண காலம் நெருங்கிய போது. பெற்றோர் வரன் பார்க்க துவங்கினர். அச்சமயத்தில் தாங்கள் யாரென்பதை உணர்ந்த இருவரும், சகோதர சகோதரியாக பிறந்த இருவரும் தங்கள் சாபத்தை எண்ணி வருந்தினர்.

இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து தங்களை மீட்குமாறு சிவபெருமானை வணங்கினர். அவர்களுக்கு தரிசனம் தந்து அருளிய சிவபெருமான், சகோதர நிலையில் பிறந்த இருவரும் திருமணம் செய்வது இயலாத காரியம் என்பதால், இந்த பிறவியில் சரஸ்வதி தேவி இங்கே தனியே கோவில் கொண்டு அருள் பாலிப்பார் என ஆசி வழங்கியதாக வரலாறு சொல்கிறது.

கல்வி வாழ்க்கையை துவங்க இருக்கும் சிறு குழந்தைகள் இக்கோவிலில் அதிகம் குவிகின்றனர். பரிட்சைக்கு செல்லும் இந்த தேவியை வணங்கி செல்லும் மாணவர்களும் அதிகம். இங்கு ஓடும் அரிசல் நதி பாவங்களை போக்கி புண்ணியம் நல்கும் புனித நதியாக போற்றப்படுகிறது. இதற்கு தக்‌ஷின திரிவேனி சங்கமம் என்ற பெயரும் உண்டு.

இக்கோவில் திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை – திருவாரூரை அடுத்த தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே நன்னிலம் என்னும் வட்டத்தில் அமைந்துள்ளது.

Similar News