சிவனின் ஜோதி ரூப தரிசனம் நல்கும் ஜோதிர்லிங்களுள் ஒன்று த்ரியம்பகேஸ்வர் ஆலயம்

Update: 2022-03-21 02:17 GMT

மகாராஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்தில் த்ரிம்பக் எனும் இடத்தில் அமைந்துள்ளது த்ரிம்பகேஸ்வரர் சிவாலயம். இது இந்தியாவின் மிகவும் புராதன கோவிலாகும். நாசிக் மாவட்டத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும், நாசிக் சாலையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. நம் இந்து மரபின் மிக புனித நதியான கோதாவரியின் மூலம் இந்த திருத்தலத்தின் அருகிலிருந்து தான் உதயமாகிறது.

12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இந்த கோவில். முறையே இன்று இருக்கும் 12 ஜோதிர்லிங்கங்கள் யாதெனில், குஜாராத்தில் உள்ள சோம்நாத் ஆலயம். ஶ்ரீசைலத்திலிருக்கும் மல்லிகார்ஜுனர், உஜ்ஜைனியில் இருக்கும் மஹாகாலேஸ்வரர், மத்தியபிரதேசத்தின் ஓம்காரேஷ்வரர், இமயத்திலிருக்கும் கேதார்நாத், மஹாராஷ்ட்ராவின் பீம சங்கரர், வாரணாசியின் விஸ்வநாதர், மஹாராஷ்ட்ராவின் த்ரிம்பகேஸ்வரர். ஜார்கண்டில் இருக்கும் வைத்தியநாதர், குஜராத்தின் நாகேஸ்வரர், ராமேஸ்வரத்திலிருக்கும் ராமநாத சுவாமி, அவுரங்காபத்திலிருக்கும் கிரிஷ்னேஸ்வரர் இந்த பன்னிரண்டு திருத்தலங்களே ஜோதிர்லிங்கம் என அழைக்கப்படுகின்றன.

இன்று இருக்கும் த்ரிம்பகேஸ்வரர் கோவிலை கட்டியவர் பாலாஜி பாஜி ராவ் ஆவார். இந்த கோவிலின் மகத்துவம் யாதெனில், இந்த கோவில் மூன்று மலைகளுக்கு இடையே கட்டப்பட்டது அதாவது ப்ரம்மகிரி, நீலகிரி மற்றும் காலகிரி.

இந்த இடத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அஞ்சனகிரி. இங்கு தான் அனுமர் ஜெனனம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் 13 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய கட்டிடக்கலையான ஹேமத்பந்தி எனும் முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் தனித்துவம் யாதெனில் இங்கே மூன்று லிங்கங்கள் பிரம்மாவாக, விஷ்ணுவாக, ருத்ரமூர்த்தியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மூன்று மூர்த்திகளுக்கும் சேர்ந்தார் போல் அமைந்துள்ள கிரீடத்தில் விலை மதிக்க முடியாத நவரத்தினங்கள் பொதிந்து இருப்பதாக சொல்லப் படுகிறது.

இந்த கிரீடத்தை வாரம்தோரும் திங்கட்கிழமைகளில் மாலை 4 முதல் 5 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். இந்த கோவில் பலவிதமான தனித்துவ பூஜைகளுக்கு பெயர் பெற்றது. நாராயண நாகபலி, காலசர்ப சாந்தி மற்றும் திரிபிந்தி விதி ஆகியவை இங்கே செய்யப்படும் சடங்குகள் ஆகும். குறிப்பாக நாராயண நாகபலி எனும் சடங்கு இந்த திருத்தலத்தில் மட்டுமே செய்யம் முடியும். இந்த பூஜை கெட்ட நேரங்களை எதிர்கொள்ள குறிப்பாக நாகத்தை அறியாமல் கொன்றிருந்தால் அந்த தோஷம் விலக, பொருளாதார சிக்கல் தீர செய்யப்படும் பூஜையாகும். நாசிக் வைரம் என உலகபிரசித்தி பெற்ற வைரம் இந்த கோவிலில் இருந்து திருடப்பட்டதே. இந்த வைரம் பிரிட்டிஷ் காலத்தில் மூன்றாம் ஆங்க்லோ மராத்தா போரின் போது களவாடப்பட்டு தற்சமயம் அமெரிகாவின் கனாடிக்கெட் மாகாணத்தில் இருக்கும் எட்வர்ட் என்பவரின் உள்ளது.

Similar News