தீபத்தின் ஜூவாலையில் ஜொலிக்கும் ஜுவாலமுகி கோவிலின் ஆச்சர்யம்!

Update: 2022-03-23 02:32 GMT

ஜூவாலா ஜி என்பது பெண் தெய்வத்தை குறிக்கும். ஜூவாலா என்றால் சமஸ்கிருதத்தில் ஒளிரும் சுடர் என்று பொருள். ஜூவாலா ஜி எனும் அம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில் இமயமலைக்கு கீழுள்ள கங்ரா எனும் பகுதியில் அமைந்துள்ளது. ஜூவாலா ஜி அல்லது ஜூவாலா தேவி அல்லது ஜூவாலமுகி எனும் பெயரில் இந்த அம்மன் அழைக்கப்படுகிறார்.

பார்வதி தேவியின் தந்தையான தட்சன், பரமசிவனை யாகத்திற்கு அழைக்காத கோவத்தில், சதி என்ற பெயர் கொண்டிருந்த பராசக்தி தன்னை தானே அழித்து கொண்டார். அந்த உடலை வைத்து ருத்ரதாண்டவம் ஆடிய சிவனை சாந்தப்படுத்த, மஹா விஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தால் பராசக்தியின் உடலை 51 துண்டுகளாக்கி 51 இடங்களில் விழச்செய்தார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் 51 சக்தி பீடங்களாக இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு முக்கியமான சக்திபீடம் தான் இந்த ஜூவாலா ஜி கோவில். இங்கு தான் சதி தேவியின் நாக்கு விழுந்ததாகவும். அவர் திருநாக்கு விழுந்த நாள் தொட்டே இங்கே ஒரு அணையா தீபம் எரிவதாகவும் சொல்லப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் இந்த தீபத்தின் மற்றொரு தனிச்சிறப்பு யாதெனில், இந்த தீபம் ஏரிவதற்கென்று இங்கே எந்த எரிபொருளும் நிரப்பப்படுவதில்லை. இயற்கையாகவே இந்த தீபம் எரிவது தான் இந்த கோவிலின் அதியத் தன்மைகளுள் ஒன்று.

முகலாய அரசனான அக்பர் இந்த ஜூவாலைக்கு பின்னிருக்கும் ரகசியம் அறிய முனைந்து தோல்வியுற்று, அந்த தோல்வியை மனமுவந்து ஏற்று இந்த ஆச்சர்ய கோவிலுக்கு தங்க்குடையை பரிசளித்தாகவும் சில வரலாற்று குறிப்புகள் உண்டு. எரிபொருள் இன்றி எவ்வாறு ஒரு விளக்கு இயற்கையாக எரிய முடியும் என்பதை ஆராய பல ஆய்வாளர்கள் இங்கே களம் இறங்கினர்.

இந்த பகுதிக்கு அடியில் ஏதேனும் இயற்கை எரிவாயு இருக்கலாம் அல்லது எரிமலை போன்ற அமைப்பு ஏதேனும் இருக்கலாம் என்ற வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவையும் தோல்வியிலேயே முடிந்தது. இந்த குகை இயற்கையாகவே உருவானது, இந்த கோவில் குறித்து மஹாபாரதத்தில் பேசப்பட்டிருக்கிறது. இங்கு சுடர்விட்டெரியும் சுடரொளியானது நீல நிறத்தில் ஜொலிக்கிறது. இந்த ஜோதியில் ஏழு முகங்கள் தெரிவதாகவும் அது சப்த கன்னியரின் அம்சம் மற்றும் ஒன்பது முகமாக தெரிகிற போது அது நவதுர்கையின் அம்சன் என நம்பப்படுகிறது . இந்த ஜோதியின் தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே உலகெங்கிலும் இருந்து வருகை புரிகின்றனர்.

Similar News