பிறவிப்பிணி போக்கி, பிரச்சனைகள் தீர்க்கும் பிரத்தியங்கரா தேவி வழிபாடு செய்வதெப்படி?

Update: 2022-05-28 01:48 GMT

பிரத்தியங்கரா தேவியை அதர்வன தேவி, நரசிம்மஹி, சிம்மமுஹி, என்ற பல்வேறு திருப்பெயர்களில் அழைப்பது வழக்கம். சக்தி வழிபாடுடன் தொடர்புடைய வழிபாடு ஆகும். மாதா லலிதா திரிபுர சுந்தரி ஆதி பராசக்தியாக இருந்த போது அவருடைய சக்தி சேனையின் தலைமை பொருப்பில் இருந்தவர் பிரத்தியங்கரா தேவி. இவர் சக்தியின் மற்றொரு அம்சமே ஆவார். மோட்சத்துடன் தொடர்புடைய அன்னை இவர்.

தன்னுடைய பக்தர்களை கர்ம சக்கரத்திலிருந்து விடுவிக்கும் அன்னையிவர். பிறப்பறுத்து முக்தி வழங்கும் தேவியிவர். நேர்மை, தர்மம், அறத்தின் தேவதை மறுக்கமுடியாத உறுதியான உண்மையின் பக்கம் நிற்க கூடிய தேவி இவர். தீய சக்திகளை கொண்டு மற்றவர்களை வீழ்த்த நினைக்கும் கூட்டம் இன்றைக்கும் உண்டு. தந்திரங்களை, தீய சக்திகளை ஏவி பிறரின் நலனை, மகிழ்ச்சியை குலைப்பவர்களை வேறோடு அழிக்கும் அன்னை இவர்.

மனித உரு மற்றும் சிம்ம உரு கலந்து காட்சி தருவதால் இவரை சிம்மமுஹி என்றும் அழைப்பதுண்டு. இவர் தீவிர மூர்த்தியாவார். வெறும் பெயரளவில் பக்தி செய்வோருக்கும், பக்தி என்ற பெயரில் இறைவனின் முன் நின்று நடிப்பவர்களுக்குமான கடவுள் இவரல்ல. பெரும்பாலும் முறையான தாந்த்ரீக ஞானம் கொண்ட குருக்களை கொண்டே இந்த வழிபாட்டை செய்வார்கள்.

அமாவாசை நாட்களில் அம்பாளுக்கு அவரின் திருக்கோவில்களில் ஹோமம் நிகழ்வதுண்டு. அவரை முறையாக வழிபடுவதால்

ஒருவர் நீண்ட கால நோயிலிருந்து விடுபட முடியும். சகல விதமான ஆரோக்கிய பேறுகளையும் ஒருவர் பெற முடியும். மனரீதியான்பிரச்சனை உள்ளவர்களும் அம்பாளை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பார்ப்பதற்கு ரெளத்திர கோலத்தில் காட்சி தரும் பிரத்தியங்கரா தேவிக்கு முனிவர்கள் கண்ட தரிசனத்தில் 1008 திருமுகங்களும், 2016 திருக்கரங்களும் இருந்ததாம். அவருடைய தேரில் நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்டிருந்ததாம். இத்தனை தீவிரமான தேவியாக இருந்தாலும், தன்னை நாடி பக்தர்களை காப்பதில் அன்னையவள், சிவபெருமானின் அதி தீவிர ரூபமான சரபேஸ்வரவரை எதிர்கொண்டார்.

இவருக்கென இருக்கும் பிரத்யேக மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் பாராயணம் செய்வது நல்லது. மந்திர உச்சாடணையை தொடங்குவதற்கான சிறப்பான நேரம் அஷ்டமி நாள், பெளர்ணமி அல்லது அமாவாசை ஆகும். குறிப்பாக மேல் கூறிய நாட்களில் ஒன்று செவ்வாயிலோ அல்லது வெள்ளியிலோ வருவது மிகுந்த சிறப்பு.

பிரத்யங்கரா தேவியின் மூல மந்திரத்தை இரவு நேரத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு சொல்வது உகந்தது. இந்த மந்திரத்தை 9 முறை சொல்வது சிறந்தது. ஏதேனும் கோரிக்கை அல்லது வேண்டுதல் இருப்பின் 108 முறை சொல்லலாம்

Similar News