அனுமர் பஞ்சமுக அவதாரமெடுத்தது ஏன்?அவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்

Update: 2022-01-15 00:30 GMT

பஞ்சமுகி என்பதற்கு சமஸ்கிருதத்தில் ஐந்து முகம் என்று பொருள். ராமருக்கும் ராவணனுக்கும் இதிகாச போர் நடந்த வேளையில் அனுமர் எடுத்த அவதாரமே பஞ்சமுகி அனுமர். போர்களத்தில் ராவணனுக்கு உதவியாக பாதாள லோக அதிபரான மஹிராவணன் விபிஷணன் ரூபம் எடுத்து ராமரையும் இலட்சுமணரையும் பாதாள லோகத்தில் சிறை வைத்தார். இந்த விஷயத்தை அறிந்த அனுமர் இராமரை மீட்பதற்காக பாதாள லோகம் சென்றார்.


அப்போது தான் மஹிராவணனின் உயிர் ஐந்து விளக்குகளில் இருக்கிறது. ஐந்தும் ஐந்து வித்தியாசமான திசைகளில் இருக்கிறது. இதை ஒரே நேரத்தில் அணைக்க வேண்டும். அவ்வாறு அணைத்தால் மட்டுமே அவன் உயிர் நீங்கும். எனவே மஹிராவணனை வதைப்பதற்கு அனுமன் எடுத்த அவதாரமே பஞ்சமுகி அனுமன்.


அதில் ஒரு முகம் தான் ஹயகிரிவா இந்த ரூபத்தை வழிபடுவதால் நல்ல புகழ் கிட்டும். இவரை வழிபடுவோருக்கு அவர்கள் விரும்பியது கிட்டும். அடுத்து நரசிம்மர் இவர் சகல விதமான பாவங்களையும் போக்குபவர் ஆவார். அடுத்து கருடர் இவர் மேற்கு நோக்கிய முகம் கொண்டவர் பில்லி சூனியம், மற்றும் பக்தர்களை பீடித்த எதிர்மறையான ஆற்றல் ஆகியவை இவரை வழிபடுவதால் நீங்கும்.


அடுத்து வராக முகம் இந்த திருமுகம் வடக்கு திசையை நோக்கி உள்ளது. இவரை வணங்குவதால் சகல விதமான பொருள், செல்வம் வளம் ஆகியவை ஒருவருக்கு கிடைக்கும். கிழக்கு நோக்கியவாறு இருப்பது அனுமரின் திருமுகம். எனவே அவரெடுத்த இந்த பஞ்சமுக அனுமரின் அவதாரத்தின் மூலம் ஐந்து என்பது அனுமரின் அம்சம் என்ற கருத்தும் உண்டு. வாயுவின் புத்திரர், நீராலான கடலை கடந்தவர், வானத்தை பறந்தே கடந்து சஞ்சீவி மலையை பெயர்த்தவர், பூமியின் திருமகள் சீதையை கண்டவர், இலங்கையை தீயினால் எரித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களான காற்று, நீர், ஆகாயம்,பூமி மற்றும் நெருப்பு ஆகியவற்றின் மீது பெரும் தாக்கம் கொண்டவராக அனுமர் திகழ்கிறார்.


எனவே பஞ்ச பூதங்களில் அருளை பெறவும், அனைத்து பஞ்சபூதங்களும் நமக்கு அனுகூலமாக அமையவும் அனுமர் வழிபாடு மிகவும் உகந்ததாகும். எனவே பஞ்சமுக அனுமர் வழிபாடென்பது பயத்தை நீக்கி, எதிர்மறை அதிர்வுகளை போக்கி, வாஸ்து தோசம் நீங்க செய்து மற்றும் கோள்களின் தாக்கத்திலிருந்து ஒருவரை காக்கிறது.




Similar News