சுப காரியங்களின் போது வீட்டு வாயிலில் மலரால் ஆன தோரணத்தை கட்டுவது நம் வழக்கம். சில சமயங்களில் இலைகளை கொண்டும் தோரணம் அமைப்பது உண்டு. குறிப்பாக மாவிலையில் தோரணம் கட்டுவது நம் கலாச்சாரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மாவிலையை வாயிலில் கட்டுவதால் வீட்டுக்குள் கெட்ட திருஷ்டிகள் அண்டாது என்பதும் அந்த வீட்டின் உரிமையாளர் விரும்புவன அவர்களுக்கு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. வீட்டின் முன் இலைகளை தோரணமாக அமைப்பதன் முக்கியத்துவத்தை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
மாமர இலையில் மஹாலட்சுமி, கோவர்தன், கந்தர்வர்கள் வசிப்பதாக ஐதீகம் சொல்கிறது. மேலும் இந்த மாம்பழத்திற்காக தான் பரம் பொருளான ஈசனின் இரு மகன்களும் சண்டையிட்ட திருவிளையாடல் நாம் அறிவரும் அறிந்ததே.
இதன் பின் இருக்கும் தார்பரியம் யாதெனில், அந்த மாம்பழம் என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்குமே ஆனால் அவர்கள் இருவரும் இதற்காக சண்டையிட்டுருப்பார்கள் என்பதே. முருக பெருமான் தான் மாவிலையை வாயிலில் கட்டும் அறிவுரையை உலகிற்கு வழங்கியதாக சொல்லப்படுவதும் உண்டு.
இவையெல்லாம் ஆன்மீக குறிப்புகள் எனில், அறிவியல் ரீதியாக மாவிலையை வீட்டின் வாயிலில் கட்டுவது ஏன் என்ற கேள்விக்கு, மாவிலை கார்பன்டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதன் மூலமாக அந்த சூழல் மிக புத்துணர்வு மிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமையும்.
இன்னும் எளிதாக சொன்னால், வீட்டின் முன்புறம் இருக்கும் இலைகள் அங்கு உலவும் காற்றை சுத்திகரிக்கிறது. இளம் இலையாக இருக்குமெனில் அதில் பச்சயம் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். அந்த இலை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று இது. அடர்த்தியான இலைகளால் மிக அதீத பச்சயத்தை உருவாக்க முடியும்.