குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?

தங்களின் குலதெய்வம் தெரியாதவர்கள் முருகப்பெருமானை குலதெய்வமாக மனதால் ஏற்று வணங்கி வந்தால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைய முடியும்

Update: 2022-09-27 14:15 GMT

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தையோ மற்ற பிற தெய்வங்களையோ வணங்கலாம். வணங்காமலும் போகலாம். ஆனால் குலதெய்வத்தை ஆண்டிற்கு ஒரு முறையாவது அந்த தெய்வம் இருக்கும் இடத்திற்கு சென்று வழிபட்டு வர வேண்டியது முக்கியமானது. ஆனால் பலருக்கும் தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதே துரதிஷ்டம் தான் .


ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கையை தேடி இருப்பார்கள் .இதனால் சுமார் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக குலதெய்வம் கோவிலுக்கு செல்லாததாலும், அதைப்பற்றி பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாத காரணத்தாலும் பிற்கால சந்ததியர் தங்களின் குல தெய்வத்தையே மறந்திருப்பார்கள். அல்லது குலதெய்வம் தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாமல் போய்விடும். இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படிப்பட்டவர்கள் எப்படியாவது தங்களின் குலதெய்வத்தை கண்டறிய வேண்டியது அவசியம் என்றாலும் அதுவரை குலதெய்வமாக தமிழ் பெரும் கடவுளான முருகப்பெருமானை வழிபட்டு வருவது நன்மை அளிக்கும்.


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். பெரும்பாலான முருகப்பெருமானின் தலங்கள் குன்றின் மீது அமைந்திருக்கும். ஆனால் கடற்கரையோரம் அமைந்த திருத்தலமாக வேறுபட்டு நிற்பது திருச்செந்தூர் திருத்தலம்.சூரபத்மனை வதம் செய்து வெற்றி வீரனாக வீற்றிருக்கும் செந்தில் ஆண்டவரை குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களின் குலதெய்வமாக நினைத்துக் கொண்டு வழிபட்டு வரலாம். இதன் மூலம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடையமுடியும்.

Similar News