நிலம், வீடு ஆகிய சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டுமா? நீங்கள் வணங்க வேண்டிய திருத்தலம் இதுதான்

திருச்சுழிக்கு வந்து ஈசனை வணங்கினால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு நிலம் , வீடு ஆகிய சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்.

Update: 2023-02-21 12:15 GMT

பூமி சம்பந்தமான பிரச்சினைகள், சொத்து தொடர்பான வழக்குகள் எதுவாக இருந்தாலும் திருச்சுழியில் கோயில் கொண்டிருக்கும் திருச்சுழிநாதனை வணங்கி கோரிக்கை வைத்தால் போதும்... அனைத்து சிக்கல்களையும் தீர்த்தருள்வார் இந்த சிவபெருமான்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சுழி எனும் புண்ணிய பூமி . பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த, இயற்கை எழில் சூழ்ந்து, ரம்மியமாக உள்ள அற்புத பூமியில் அமைந்துள்ளது ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கோயில்.

சுமார் 2,000 வருடப் பழமை மிக்க ஆலயம். சுயம்பு மூர்த்தமாக, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் ஸ்ரீதிருமேனிநாதர். ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீதிருமேனிநாதர் என நான்கு யுகங்களில் நான்கு திருநாமங்களுடன் காட்சி தந்து அருளினாராம் சிவபெருமான். தற்போது கலியுகத்தில், திருமேனிநாதராக அருள் பாலிக்கிறார்.

பூமாதேவி, அரக்கர்களைக் கொன்ற பாவம் தீர, இங்கு வந்து தீர்த்தம் உண்டு பண்ணி, அதில் நீராடி சிவனாரை தவமிருந்து வணங்கி, பாப விமோசனம் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கே உள்ள திருக்குளம் மகிமை வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

பூமாதேவி, இங்கு வந்து சிவ பூஜை செய்து, தன் பாவங்களில் இருந்து நிவர்த்தி அடைந்தாள். எனவே, இங்கு வந்து வழிபடுவோருக்கு, ஏழேழு ஜென்மப் பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்! அதேபோல், திருமேனிநாதரை வழிபட்டால், நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து, நிம்மதியாக வாழலாம். நிலத்தில் சிக்கல், விளைச்சல் குறைபாடு என இருந்தால், நிலத்தில் இருந்து மண் எடுத்து வந்து, சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு பிறகு நிலத்தில் அந்த மண்ணைக் கலந்துவிட்டால், விவசாயம் செழிப்பதோடு, நிலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.

Similar News