தினம் தினம் வளர்ந்து வரும் சிவலிங்கம் - மேற்கூரை இல்லாத ஆலயம் எங்கு தெரியுமா?

தினம் தினம் வளர்ந்து வரும் மிகப்பெரிய சிவலிங்கத்தின் சிறப்பு பற்றியும் அந்த ஆலயத்தைப் பற்றியும் காண்போம்.

Update: 2024-07-04 15:27 GMT

பழங்காலத்தின் அனைத்து சிவ லிங்கங்களும் அளவில் சிறியவையாக இருந்தன. மேலும் அவை அனைத்தும் சுயம்பு லிங்கமாக உள்ளன. எனினும் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை பெரிய சுயம்புலிங்கம் ரவிவலாசாவில் இருப்பதை மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். அது 55 அடி உயரம் கொண்டது. அதன் மேற்பகுதி மூடப்படாத நிலையில் கோயிலின் அமைப்பும் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூரை இல்லாத காரணத்தால் சிவலிங்கம் எப்பொழுதுமே சூரிய வெளிச்சத்தின் கீழ் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுன சுவாமி என்று  அழைக்கப்படுகிறார். மேற்கூரை இல்லாத காரணத்தால் மல்லிகார்ஜூனா சுவாமி சூரியனில் இருப்பதாக அர்த்தப்படுகிறது. 1824 ஆம் ஆண்டில்  மல்லிகார்ஜுன சுவாமி கோயிலை தெக்காலி சமஸ்தான தேஷா ஹரி சந்தன புருந்தவன ஜகதீஷ் சீரமைத்து மீண்டும் கட்டினார் என கோயிலின் மூத்த பூசாரியான பார்லா யுகாந்தர் தெரிவித்தார்.

சமஸ்தானதேஷா கோயிலை மேற்கூரையுடன் கட்டியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் அடுத்த நாளே அந்த மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு மூன்று முறை நடந்துள்ளதாக தெரிவித்தார். ஒரு நாள் சிவபெருமான் கனவில் தோன்றி நான் தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் மேற்கூரை கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக சமஸ்தானதேஷா மேற்கூரை இல்லாமல் கோயிலை அமைத்துள்ளார் என்று பார்லா யுகாந்தர் தெரிவித்தார். மேலும் இந்த சிவலிங்கம் 55 அடி உயரம் கொண்டதாகவும், அவர்களுக்கென்று ஒரு மண்டபம் இருப்பதாகவும் கூறுகிறார்.

அனைத்து பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை மண்டபத்தில் இருந்து செய்வோம் என்றும், தேவைப்பட்டால் ஒரு ஏணி வைத்து சிவலிங்கத்தின் உச்சியை அடைவோம் என்றும், கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை மாசம் மற்றும் மகா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இராவண சாமராஜ்யம் அழிக்கப்பட்டு இலங்கையிலிருந்து அயோத்தியாவுக்கு ஸ்ரீ ராம கடவுள் செல்லும் பொழுது தம்மை பின்பற்றுபவர்களுடன் சுமாஞ்சா மலையில் தங்கினார். அவருடைய குழுவில் இருந்த ‘கடவுள்களின் மருத்துவரான’ சுசீனா அந்த மலைப்பகுதி முழுவதும் மருத்துவ குணங்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இந்த மலையை சுற்றி அவ்வளவு மருந்துகள் இருந்தும் அப்பகுதி மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டு இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள மக்களின் நோய்களை தீர்ப்பதற்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

தன்னுடைய இந்த முடிவு குறித்து ஸ்ரீராமனிடம் தெரிவித்து, சுமாஞ்சா மலையில் தான் தவம் புரிய நினைப்பதாக சுசீனா கூறினார். உடனே ஸ்ரீராமனும் அவருடைய ஆசையை நிறைவேற்றி அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, தன்னுடைய குடும்பம் மற்றும் தம்மை பின்பற்றுபவர்களுடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் சுசீனா சுமாஞ்சா மலையில் சிவபெருமானுக்காக கடுமையான தவம் புரிந்தார். சிறிது நேரம் கழித்து சுசீனா என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக ஸ்ரீராமன் அனுமானை அனுப்பி வைத்தார். அனுமான் சுமாஞ்சா மலை பகுதிக்கு வந்தபோது அவரால் சுசீனாவின் உடலை மட்டுமே பார்க்க முடிந்தது. உடனடியாக சுசீனாவின் உடலை அனுமான் அடக்கம் செய்துவிட்டு, அதன் மீது மல்லிகைப் பூக்களை தூவி அதனை மானின் தோல் கொண்டு மூடினார். இந்த விஷயங்களை ஸ்ரீராமனிடம் தெரிவித்தார். விஷயத்தை கேள்விப்பட்ட ராமன், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமானுடன் சுமாஞ்சா மலைக்கு வந்தனர்.

சுசீனாவின் உடலை காட்டுவதற்காக அனுமான் தான் போர்த்தி வைத்திருந்த மானின் தோலை நீக்கினார். அவர் மானின் தோலை நீக்கியவுடன் சுசீனாவின் உடலில் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. மேலும் அதன் மீது பூக்கள் காணப்பட்டது. உடனடியாக ஸ்ரீ ராமன், சீதா மற்றும் லட்சுமணன் ஆகியவருடன் அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு சிவலிங்கத்தை வழிபட துவங்கினார். அந்த சிவலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை அவர் கண்டுபிடித்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள மருந்து மற்றும் மூலிகைகளின் வாசனை சிவலிங்கத்தை காற்று மூலமாக தொடுவதை கவனித்தார். இந்த சிவலிங்கத்திற்காக ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று ஸ்ரீராமன் எண்ணினார். ஆனால் சிவலிங்கம் வளர்ந்து கொண்டே இருந்ததால் அவர் அந்த யோசனையை கைவிட்டார். அதிலிருந்து சிவலிங்கம் தொடர்ச்சியாக வளர்ந்து தற்போது ஒரு மகாலிங்கமாக உருவெடுத்துள்ளது.

பாண்டவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது சீதா குண்டா என்ற அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு அங்கு இருந்த குகையில் தங்கினர் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. இந்த மலையில் அர்ஜுனா சிவபெருமானுக்காக தவம் புரிந்தார். அர்ஜுனனின் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவர் முன்பு தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே அர்ஜுனன் ‘ஓ மல்லிகார்ஜுனேஸ்வரா இந்த இடம் உன்னுடைய பெயரால் பிரபலம் அடைய வேண்டும்.’ என்று கூறினார். அதிலிருந்து இந்த கோவில் மல்லிகார்ஜுன சுவாமி தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 55 அடி சிவலிங்கத்திற்கு எப்படியாவது ஒரு நிரந்தர அமைப்பு கட்டி விட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கூறி வந்துள்ளனர். ஆனால் பூசாரியின் கனவில் தோன்றிய சிவபெருமான் தான் தினம் தினம் வளர்வதாகவும், அதனால் இந்த கோவிலுக்கு மேற்கூரை கட்ட வேண்டாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.


Tags:    

Similar News