துன்பங்களை அகற்றும் கோ பத்ம விரதம்!

கோ பத்ம விரதத்தின் மகிமை பற்றி காண்போம்.

Update: 2024-07-29 17:32 GMT

ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஆனது பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை பத்ம ஏகாதசி, தேவபூதி ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி, தாயணி ஏகதசி என்று பல பெயர்களில் அழைக்கிறோம் .விஷ்ணு பகவான் தன்னுடைய உலகக் கடமைகளை நிறைவேற்றிய பிறகு பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இதுவாகும். அந்த நான்கு மாதங்களும் சதுர்மாஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும் . அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது. இந்த நாளில் கோபத்ம விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. கோ எனும் பசு வழிபாடு புராணங்களில் மிகச்சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது. பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து பல்வேறு பொருட்களும் உயிரினங்களும் தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றில் கேட்டதை கொடுக்கும் காமதேனு பசுவும் அடங்கும் .

இந்த பசுவிற்கு பட்டி, விமலி ,சயனி, நந்தினி ,கொண்டி என்ற 5 குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. சிவபெருமான் நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது. அதன்படி இந்திரனுக்கு :சுசீலை' என்ற பசுவும் எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும் வர்ணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும் குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள் புரிகின்றனர். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று கோபத்ம விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள் அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கட்டிலில் பச்சரிசி மாவால் தாமரைபூ  வரைந்து கோலம் போட்டுவிட்டு பின்னர் சிறிய சிறிய கோலங்களாக  தாமரைப் பூ இதழ்களுடன்  33 கோலங்கள் போட வேண்டும். இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும் தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம் .இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜை தொடங்கியதும் கேசவா நமஹ, ஓம் நாராயணா நமக, ஓம் மாதவா நமஹ, கோவிந்தா நமஹ, ஓம் விஷ்ணு நமஹ, ஓம் மதுசூதனா நமஹ என்று நாராயணனின் 12 நாமங்களையாவது குறைந்தது உச்சரித்து பூஜிக்க வேண்டும். இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பானது . 33 வகையான நைவேத்தியங்கள் படைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 33 முறை விக்ரகத்தை சுற்றி வலம் வந்து வணங்க வேண்டும். பிறகு அந்த நைவேத்தியத்தை 33 பேருக்கு எடுத்து கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.

Tags:    

Similar News