கேரள மாநிலத்தின் மிகப்பெரிய முருகன் சிலை உள்ள ஆலயம்- எட்டடி உயர மூலவர் அருளும் ஹரிப்பாடு திருத்தலம்!

கேரள மாநிலத்தின் மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள ஹரிப்பாடு சுப்பிரமணியர் கோவிலை பற்றி காண்போம்.

Update: 2024-01-25 12:15 GMT

கேரள மாநிலத்தின் தென்பழனியாக பக்தர்களாக போற்றப்படும் திருத்தலம் சூரபத்மனை வதம் செய்து வந்த செந்தில் நாதனை விஷ்ணு வரவேற்ற பூமி, பரசுராமர் உருவாக்கிய மூலவர், தைப்பூச திருவிழாவை கொண்டாடி மகிழும் ஆலயம் ,கேரளத்தின் மிகப்பெரிய முருகன் ஆலயம், எட்டடி உயரமான மூலவர் அருளும் தலம், பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணுவின் அம்சங்களைக் கொண்ட முருகன் வாழும் தலம், திருவிதாங்கூர் மன்னர் புனரமைத்த ஆலயம், தமிழ் அந்தணர்கள் பூஜை செய்யும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் நிறைந்த தலமாக விளங்குவது கேரளத்தின் ஹரிப்பாடு சுப்பிரமணியர் திருக்கோவில்.


இக்கோவில் கலியுகத்திற்கு முன்பு தோன்றியதாக கருதப்படுகிறது .இன்று நாம் தரிசிக்கும் மூலவர் பரசுராமரால் பூஜிக்கப்பட்டவர் என்று தல வரலாறு சொல்கிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் 'அரைநாழி நற்பறை 'எனும் இடத்தில் சன்னியாசி ஒருவரிடம் இந்த சுப்பிரமணியர் கிடைத்ததாக கூறப்படுகிறது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு இவ்வாலயம் தீ விபத்தை எதிர்கொண்டது. ஆனால் கூத்தம்பலமும் ,கொடி மரமும் பாதிக்கப்படவில்லை.


இதன் பின்பு   ராமவர்மா காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் தீக்கிரையான பின்பு மூலவராக எந்த சிலையை வைப்பது என்ற குழப்பம் நம்பூதிரிகளிடம் ஏற்பட்டது .அன்று இரவு அனைவருக்கும் ஒரே கனவு ஏற்பட்டது. அதன்படி ஏரியில் பூமாலை தென்பட்டது. அங்கே மூழ்கி பார்த்தபோது சிலை ஒன்று கிடைத்தது. அதுவே இன்று நாம் வழிபடும் முருகப்பெருமான் ஆவார். இது கிடைத்த நாளான தை மாசம் பூச நட்சத்திரம் என்று ஹரிபாடுஆலயத்தில் பிரதிஷ்டா நாள் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் தமிழ் அந்தணர்களே பூஜை செய்து வருகின்றனர். எட்டடி உயரத்தில் நான்கு கரங்களுடன் வேல், வஜ்ராயுதம், அபயமுத்திரை தாங்கி ஒரு கரத்தை தொடை மீது வைத்து பிரம்மாண்டமாக கிழக்கு முகமாக காட்சி அருளுகிறார் இத்தல முருகப் பெருமான்.


இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் பகல் 12:30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7:45 வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கேரள மாநிலம் ஆழப்புழா வட்டத்தில் கொல்லத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஹரிப்பாடு திருத்தலம். திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆலப்புழாவிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும் கொல்லம் நகரில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. ஹரிப்பாடு சுப்ரமணியர் கோவிலின் அருகில் புகழ்பெற்ற மண்ணார்சாலை நாகர் ஆலயம் அமைந்துள்ளது.

Similar News