கலையின் உச்சம்! விக்ரகத்தின் மீது சூரிய கதிர் விழும் அதிசய சூரியனார் கோவில்!

கலையின் உச்சம்! விக்ரகத்தின் மீது சூரிய கதிர் விழும் அதிசய சூரியனார் கோவில்!

Update: 2021-02-07 07:37 GMT

உத்ராயணம் மற்றும் தட்சிணாயனம் அதாவது தை மற்றும் ஆடி மாதத்தின் முதல் நாள் மட்டும் கோவிலில் உள்ள விக்ரகத்தின் மீது கதிர்கள் விழும் இந்த அதிசய சூரியனார் கோவில். சமீபத்தில் உலக அளவில் டிரெண்டிங்.

காரணம் நம் பாரத பிரதமர் நேற்று இக்கோவிலின் ஒரு சிறு காணொளியை பகிர்ந்தது தான். சில மாதங்கள் முன்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குளில் “’ மொதேராவின் சூரியக் கோவில், ஒரு மழைநாளில் பார்ப்பதற்கு எத்தனை அற்புதமாய் “’  இருக்கிறது என்று பதிவிட்டு மிகவும் இரம்மியமான ஒரு காணொலியை பதிவேற்றியிருந்தார். அந்த காணொலியில் அக்கோவிலின் பிரமாண்ட வடிவமைப்பான படிகட்டுகளில் இருந்து மழை நீர் அடுக்கடுக்கடுக்காய் வழிந்தோடுகிறது. இரசனை ததும்பும் அக்காணொலியை அவர் பகிர்ந்த சில மணி நேரங்களிலெல்லாம் அந்த பதிவு உலக அளவில் டிரெண்டிங் ஆனது.

பார்வைக்கு ரம்மியமான இடம் என்பதை தாண்டி, அக்கோவிலின் மற்ற சிறப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.

குஜராத்தின், மெஹ்சானா என்ற மாவட்டத்தில் உள்ளது மொதெரா என்ற கிராமம். அங்கு அமைந்துள்ளது தான் இந்த சூரிய கோவில். இக்கோவில் புஷ்பவதி நதிக்கரையில் அமைந்துள்ளது. செளராஸ்டிர தேசத்தை ஆண்ட சோலங்கி வம்சத்தின் மன்னர்  முதலாம் பீமரால் கட்டப்பட்டது இக்கோவில்.

இப்போது இக்கோவில்களில் வழிபாடுகள் ஏதும் நடப்பதில்லை, காரணம் இதன் கலை நுணுக்கம் மிகுந்த வேலைபாடுகளாலும், கட்டமைப்பாலும் தற்சமயம் இக்கோவில் இந்தியத் தொல்லியல் துறையின் வசம் உள்ளது.

இந்த கோவில் அமைந்துள்ள இடம் புராணங்களில் பாடப்பெற்று புகழ்பெற்றது. இந்த இடத்தை  தரும ஆரண்யம் என்று ஸ்கந்த புராணமும், பிரம்ம புராணமும் பாடுகின்றன.

சாளுக்கியர்களின் கட்டிடக்கலைக்கு தகுந்த உதாரணமாக இக்கோவில் திகழ்கிறது. ஏராளமான தனிச்சிறப்புகளும் கலை நுணுக்கங்களும் இக்கோவிலின் தனித்துவமாகும். இக்கோவில் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது. சபா மண்டபம், குடா மண்டபம், மற்றும் சூரிய குண்டம் என்று அப்பகுதிகள் அழைக்கப்படுகின்றன.

சூரிய குண்டம் என்பது பிரமாண்ட அமைப்பு. அதாவது அக்கோவிலின் ஆழமான குளத்தை சுற்றி செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் நீராடிய பின்னரே மக்கள் சூரிய தேவரை வழிபடுகின்றனர். இக்குளத்தில் இறங்க நூற்றுக்கணக்கான படிகட்டுகளும், அந்த படிக்கட்டுகளுக்கு இடையிடையே 108 சிறு சிறு சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன..

அடுத்து சபா மண்டபம் என்பது 52 தூண்களை கொண்டுள்ளது. இதில் மஹாபாரதம், இராமாயணம், கிருஷ்ன லீலை ஆகியவை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

குடா மண்டபத்தில் தான் கருவறை அமைந்துள்ளது. அங்கே சூரிய பகவன் தனது தங்கத் தேரில் அமர்ந்து குதிரைகளை ஓட்டும் நிலையில் தங்கத்தால் வடிக்கப்பட்டுள்ளார். இங்கிருந்த தங்கமெல்லாம் கசினி முகமது உடைத்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் உலக புகழ் பெற்ற நாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது. உலகத்தின் புகழ் பெற்ற கலைஞர்களெல்லாம் இங்கே குவிந்து மூன்று நாட்களும் நிகழும் அந்த நாட்டியஞ்சலி நிகழ்கிறது. இது இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்டைய கால பாரம்பரியத்தையும் உலகத்திற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Similar News