சனியின் தாக்கத்திலிருந்து தப்ப அனுமனை வணங்கச் சொல்வது ஏன்?

Update: 2021-04-25 23:45 GMT

சனிபகவான் சனிக்கோளின் அதிபதி ஆவார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் புனிதமானவர். சனி பகவானின் முக்கியத்துவத்தை அவர் ஆற்றும் அற்புதத்தை தாக்கங்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

சனிபகவானுக்கு படைக்கப்படும் பலவிதமான அர்பணங்களில் அவருக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுவது எள்ளு எண்ணெய். ஏன் அவருக்கு எண்ணை காப்பு சாற்றப்படுகிறது? என்பது குறித்து நம் வரலாற்றில் ஒரு குறிப்பு உண்டு.




 


நம்முடைய ராமாயணத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற பொழுது, அனுமர் ராமரை நோக்கி தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சனி பகவான் . "நான் கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவன் ஆனால் நீங்கள் தான் மிகவும் பலசாலி என அனைவரும் சொல்கிறார்கள். எனவே உங்களுடைய பலத்தை பரிசோதிக்க இங்கு வந்தேன் " என்றார்.

தவத்தில் இருந்து கண்விழித்த ஹனுமான் "நான் என்னுடைய பகவானை நினைத்து தவம் இயற்றும் பொழுது தொந்தரவு செய்ய வேண்டாம்" என எச்சரிக்கை செய்தார். ஆனாலும் கூட அந்த எச்சரிக்கைகளை துச்சமாக எண்ணி மீண்டும் அனுமரை தொந்தரவு செய்தவாறே இருந்தார் சனிபகவான். இதனால் வெகுண்டெழுந்த அனுமர் சனிபகவானை தன்னுடைய வாலினால் இறுகக் கட்டினார்.



அந்தப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சனிபகவான் பலமுறை முயற்சி செய்தும் அவரால் இயலவில்லை. மேலும் கீழுமாக சனிபகவானை உலுக்கினார் ஹனுமான். சனிபகவானின் வலியில் துடித்தார். அவருடைய வலி மிகவும் தீவிரம் அடைந்த பொழுது "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என மன்றாடினார்.. "நான் இனி ஒருபோதும் இந்த தவறை திரும்ப செய்ய மாட்டேன்" என வாக்குறுதி அளித்தார். இதைக் கேட்ட அனிமர் "உன்னை விடுவிக்க வேண்டும் எனில் நீ எனக்கு ஒரு வாக்களிக்க வேண்டும் ராம பக்தர்களை ஒரு போதும் நீ வருங்காலத்தில் தொந்தரவு செய்யக்கூடாது" என்றார்

மிகுந்த வலியில் இருந்த சனிபகவான் "நிச்சயம் உங்களையும் பெருமாளையும் வழிபடுபவரின் நான் அதிகமாக தாக்க மாட்டேன்" என வாக்களித்தார். அதற்குப் பின் விடுதலை பெற்ற சனி பகவான் அனுமனிடம் . "நீங்கள் என்னை இறுகப் பிடித்து இருந்ததில் எனக்கு பெரும் வலி ஏற்பட்டுள்ளது. இந்த வலி நீங்க எனக்கு ஒரு மார்க்கம் சொல்லுங்கள். " எனக் கேட்டார். அப்பொழுது அனுமர் வழங்கிய எண்ணையை அவர் பயன்படுத்திய பின்னர் அந்த வலியில் இருந்து விடுதலை பெற முடிந்தது.

இதன் பொருட்டே சனிபகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றுவது வழக்கமாக அன்று முதல் இருந்து வருகிறது. சனிக்கிழமைகளில் எண்ணெய் சாற்றுவது மிகவும் உகந்தது. கடுகு எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை சனி பகவானுக்கு சாற்றுவது வழக்கம். இன்றும் கூட பல ஆன்மீக அறிஞர்களும் ஜோதிட வல்லுனர்களும் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட அனுமரை வணங்குங்கள் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

Tags:    

Similar News