40 டன் எடை.. 21 அடி உயர காளிதேவி சிலை.. சென்னையில் இருந்து ஆந்திரா புறப்பட்டது.!

40 டன் எடை.. 21 அடி உயர காளிதேவி சிலை.. சென்னையில் இருந்து ஆந்திரா புறப்பட்டது.!

Update: 2020-12-26 19:13 GMT

சென்னை அருகே 40 டன் எடை கொண்ட காளி சிலை 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றி ஆந்திரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேவகோட்டையை «ர்ந்த ஸ்தபதி முத்தையா சபாபதி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பழைய மாமல்லபுரம் சாலை கேளம்பாக்கம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக ஸ்வர்ணம் சிற்பக்கலைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இங்கு, நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர்களும், சிற்ப கலைஞர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு அம்மன் சிலை, விநாயகர் சிலை, சிவன் சிலை என பல்வேறு சாமி சிலைகளை செதுக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கலைக்கூடத்தில் மிக பிரமாண்டமான 40 டன் எடையும், 21 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 கைகள் கொண்ட காளி சிலை செதுக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம் திரிபுரந்தாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கபாலிக் தப்போ சித்தா ஆசிரமத்தில் வைப்பதற்காக காளிதேவி சிலை ஆர்டர் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 40 டன் எடை கொண்ட காளிதேவி சிலையை செதுக்கினர். தினமும் 10க்கும் அதிகமான சிற்ப கலைஞர்கள் சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்து இன்று ஆந்திரா மாநிலத்திற்கு காளிதேவி சிலை பூஜைகள் செய்து 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டது. இதனை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News