கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு குறைவான கோவில்கள் ஏன்?

கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு குறைவான கோவில்கள் ஏன்?

Update: 2021-01-17 05:45 GMT

கல்வியா செல்வமா வீரமா என்ற கேள்வி வந்த போது கூட மூன்றுமே சமமான அளவில் தேவை என்ற போதும், கல்வி சற்று மேலோங்கியிருந்ததை நாம் வரலாற்றின் வாயிலாக அறிகிறோம். ஞானத்தின் பலம் எப்போதும் ஓங்கியிருக்கும் என்பதே விதி. ஆனாலும் கூட மிக முரண்பாடாய், கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு கோவில்கள் என்பது மிக அரிதாகவே நம் நாட்டில் காண முடிகிறது. குறிப்பாக தமிழகத்தில் சரஸ்வதி கோவில் என பெயர் சொல்லும் கோவிலாக இருப்பது கூத்தனூர்.. இங்கே பிரதான தெய்வமாக இருந்து அருள் பாலிப்பவர் சரஸ்வதி என்பது தனிச்சிறப்பு.

வரகவி ஆக திகழ்ந்த ஓட்டக்கூத்தர் தனக்கு கவிப்பாடும் திறமை வேண்டும் என கோரி கடும் பக்தியை மேற்கொண்டார். அதன் விளைவாகவே அந்த ஊர்க்கு கூத்தனார் என்ற பெயர் வந்தது. அதுமட்டுமின்றி எங்குமே சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாத போது, இங்கு மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்ததன் பின் சொல்லப்படும் வரலாறு யாதெனில், ஒரு முறை சரஸ்வதி தேவிக்கும் பிரம்ம தேவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இருவரும் ஒருவருக்கொருவர் வழங்கி கொண்ட சாபத்தின் பயனாய் பூலோகத்தில் சோழ நாட்டில் உள்ள புண்ணிய கீர்த்தி மற்றும் சோபனை என்ற தம்பதியருக்கு பிரம்ம தேவர் பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், ஸ்ரதா என்ற பெயரில் சரஸ்வதி தேவி மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண காலம் நெருங்கிய போது. பெற்றோர் வரன் பார்க்க துவங்கினர். அச்சமயத்தில் தாங்கள் யாரென்பதை உணர்ந்த இருவரும், சகோதர சகோதரியாக பிறந்த இருவரும் தங்கள் சாபத்தை எண்ணி வருந்தினர்.  இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து தங்களை மீட்குமாறு சிவபெருமானை வணங்கினர்.

அவர்களுக்கு தரிசனம் தந்து அருளிய சிவபெருமான், சகோதர நிலையில் பிறந்த இருவரும் திருமணம் செய்வது இயலாத காரியம் என்பதால், இந்த பிறவியில் சரஸ்வதி தேவி இங்கே தனியே கோவில் கொண்டு அருள் பாலிப்பார் என ஆசி வழங்கியதாக வரலாறு சொல்கிறது.

இக்கோவில் திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை – திருவாரூரை அடுத்த தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே நன்னிலம் என்னும் வட்டத்தில் அமைந்துள்ளது. கல்வி வாழ்க்கையை துவங்க இருக்கும் சிறு குழந்தைகள் இக்கோவிலில் அதிகம் குவிகின்றனர். பரிட்சைக்கு செல்லும் இந்த தேவியை வணங்கி செல்லும் மாணவர்களும் அதிகம். இங்கு ஓடும் அரிசல் நதி பாவங்களை போக்கி புண்ணியம் நல்கும் புனித நதியாக போற்றப்படுகிறது. இதற்கு தக்‌ஷின திரிவேனி சங்கமம் என்ற பெயரும் உண்டு.

Similar News