தரிசனத்திற்கு பின் கோவிலில் சில நிமிடங்கள் அமர்வது ஏன்?

தரிசனத்திற்கு பின் கோவிலில் சில நிமிடங்கள் அமர்வது ஏன்?

Update: 2020-11-12 05:45 GMT

வாழ்வின் நல்வாழ்விற்காக  நம் செய்யும் பல விஷயங்களில் முக்கியமானது பிரார்த்தனை. பிரார்த்தனையை நாம் இருந்த இடத்திலேயே மனதிற்குள் நிகழ்த்தி கொள்ளலாம் என்ற போதும். அதற்குரிய இடமாக கருதப்படுவது கோவில்.

பொதுவாக கோவில் என்பது பூமியின் காந்த அலைகள் அதிகம் பரவ கூடிய இடத்தில் அமைந்திருக்கும். அல்லது கோவிலில் இருக்கும் நல்லதிர்வுகள் அந்த ஆற்றலை ஈர்க்க உதவியாக அமையும் .

இந்த ஆற்றலை உள்வாங்க வேண்டும் என்பதற்காக தான் கோவிலில் நாம் அதிக நேரம் செலவிடும் படியான வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டது. கடவுளுடைய ஆசிர்வாதம் கிடைப்பதென்பது நமக்கு ஏதோவொரு பொருள் கிடைக்கப்போவதை போன்றது அல்ல. ஆசி என்பதே நல்ல ஆற்றலை நாம் பெறுவது தான்.

இதனை ஒட்டியே அனைத்து வழிபாட்டு சடங்குகளும் உருவாக்கப்பட்டன. ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் மென்மையான கதகதப்பை நேர்மறை ஒளியின் ஆற்றலையும் வழங்குகிறது. கற்பூரம், தூபம் போன்ற வாசனை பொருட்கள் நல்ல வேதியல் மாற்றத்தையும் நமக்குள் நிகழ்த்துகிறது.

இது போல், அனைத்து நல்ல அம்சங்கள் நிறைந்த இடத்தில் நாம் இன்னும் அதிகமான நேரம் இருக்க வேண்டும் என்பதே தார்பரியம். அதனாலேயே, கோவிலில் தரிசனத்திற்கு பிறகு சில நிமிடங்கள் அமர வேண்டும் என்கின்றனர்.

இதற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு, கோவிலில் தரிசனத்திற்கு பின்பாக பிரகாரத்தை சுற்றி வரும் பழக்கம் நம் தென்னகத்தில் அதிகம் உண்டு. முந்தைய காலங்களில் கோவில்கள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். அதேவேளையில் 11, 15, துவங்கி இன்னும் அதிக எண்ணிக்கையில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது பிரதக்‌ஷணம் முடிந்த பின் ஓய்வாக அமர்வது ஒரு வழக்கமாக இருந்தது.

மேலும் அங்கிருக்கும் நல்ல சக்தி மிகுந்த ஆற்றலை அடிப்படையாக கொண்டு தியானம் செய்ய ஏதுவாக இந்த வழக்கம் அமைந்திருந்தது. அமைதியான சூழலும், பக்தி நிறைந்த சூழ்நிலையும் தியானத்திற்கு பெரிதும் உதவும் என்பது இந்த வழக்கத்திற்கு பின் சொல்லப்படும் காரணம்.

அடுத்து கோவில்களில் சில நேரம் அமர்வதால், நண்பர்கள் குடும்பத்தார் தெரிந்தவர் போன்றவர்களோடு சிறிது நேரத்தை செலவிடலாம். இது உறவுகள் மேம்பட உதவும். மேலும் இறைவனை தரிசித்த கையோடு சிறிது நேரம் அமர்ந்து, பாடல்கள், துதிகள் பாடி இறைவனின் சிந்தனையில் திளைத்திருப்பது நம் மன நலத்திற்கு மிக உகந்ததாக அமையும்.

Similar News