அறிமுக போட்டியிலேயே அசத்திய அக்ஷர் படேல்.!

அறிமுக போட்டியிலேயே அசத்திய அக்ஷர் படேல்.!

Update: 2021-02-16 16:34 GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 1-1 என தொடரையும் சமன் செய்துள்ளது.முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியிலிருந்த அக்சர் பட்டேல் 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ரூட் உட்பட 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் 2 விக்கெட்டுகளை அக்சர் பட்டேல் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில்இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து தனது சூழல் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அக்சர் பட்டேல் மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் அரங்கில் தனது முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெகுசில வீரர்களின் வரிசையில் இவரும் இடம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர் கூறுகையில்,முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது தனித்துவமான அனுபவமாக இருக்கிறது.

போட்டி துவங்குவதற்கு முன்பாக குல்தீப் யாதவ் என்னிடம், களத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது; ஆதலால் வேகத்தை அதற்கேற்றார்போல் மாற்றி மாற்றி பந்துவீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என அறிவுறுத்தினார். எனக்கும் அதே யோசனை இருந்தது. முன்பு பேசியதுபோல் எனது வேகத்தை மாற்றி பந்துவீசினேன். பேட்ஸ்மேன்கள் நிறைய தவறு செய்தனர். என்னால் அதனை பயன்படுத்த முடிந்தது. விக்கெட்டுகளும் எடுக்க முடிந்தது என கூறியுள்ளார்.

Similar News