முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி!

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி!

Update: 2021-02-09 16:20 GMT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளதுஇந்த தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லி 87 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 337 ரன்னில் சுருண்டது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டும் ஆண்டர்சன், ஆர்சர், ஜேக் லீச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதில் குறிப்பாக சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் 6 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் வெறும் 178 ரன்களுக்கே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

420 ரன்கள் இலக்கு என்பது சற்று சிரமம் தான் என்றாலும், இந்திய அணி எப்படியாவது போட்டியை டிரா செய்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியில் விராட் கோலி (72) மற்றும் சுப்மன் கில் (50) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 192 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த அபார வெற்றியின் மூலம், டெஸ்ட் சாம்பியன்சிப்பிற்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Similar News