சிட்னி டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவாரா நடராஜன்?
சிட்னி டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவாரா நடராஜன்?
இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஏற்கனவே முகமது ஷமி காயம் காரணமாக விலகியிருக்கும் நிலையில், தற்போது உமேஷ் யாதவும் காயம் காரணமாக விலகுவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது டெஸ்ட்டில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக நடராஜன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், வரும் 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் 3-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்கக்கூட வாய்ப்புள்ளது. ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, சில பவுலர்களின் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் பெற்ற நடராஜன், அந்த போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர்.