8 மாதத்திற்கு பின்.. இன்று முதல் மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.!

8 மாதத்திற்கு பின்.. இன்று முதல் மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.!

Update: 2020-12-14 08:01 GMT

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் திறக்க உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெரினா கடற்கரையை டிசம்பர் 14ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என நீதிமன்றத்தில் கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என கூறியிருந்தார். 

இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த உத்தரவால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகள் அடைப்பட்டு கிடந்தனர். இதனால் இன்று முதல் பொழுதுபோக்குக்காக மெரினா கடற்கரைக்கு சென்று வருவார்கள். அனைவரும் முகவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

Similar News