வைகை ஆற்றில் பெருக்கெடுத்த விஷ நுரை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

வைகை ஆற்றில் பெருக்கெடுத்த விஷ நுரை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

Update: 2020-11-28 12:20 GMT

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரை கடந்து வடமேற்கு நோக்கி ஆந்திரா வழியே சென்றது. இந்த புயலால் தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புயலை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு மதுரையில் தொடர்ந்து 2 மணிநேரம் வரை கனமழை பெய்துள்ளது.

இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கானது வைகை ஆற்றில் கரைபுரண்டோடியது. ஆற்றில் கழிவு நீரும் கலந்து சென்றுள்ளது. இதனால் நேற்றிரவு வைகை ஆற்றின் ஒரு பகுதி மற்றும் செல்லூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் விஷ நுரை மிதந்தது. இந்த நுரையானது செல்லூர் பாலத்தின் மீது ஏறி வெளியே வந்தது. இதனால் அந்த வழியே வாகனத்தில் சென்றவருக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு இன்று தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை தொடர்ந்து வந்த வைகை ஆற்றின் ஒரு பகுதியில் திரண்டிருந்த நுரையை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News