இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு.. வீட்டு தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் இடுபொருட்கள்.. தோட்டக்கலைத்துறை அசத்தல்.!

இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு.. வீட்டு தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் இடுபொருட்கள்.. தோட்டக்கலைத்துறை அசத்தல்.!

Update: 2020-12-03 09:36 GMT

நகரங்களில் வசிக்கின்ற மக்களும் விவசாயம் செய்யும் வகையில் தோட்டக்கலைத்துறை பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒருபடிதான் வீட்டில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பணிகளில் தோட்டக்கலை துறை இறங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையால், உங்கள் வீட்டு தோட்டம் என்ற, திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் வீடுகளில் தோட்டம் அமைத்தால் காய்கறி செடிகள் செழிப்பாக வளரும்.

கோடை காலத்தில் அவற்றில் இருந்து காய்கறிகள், கீரைகளை அறுவடை செய்து அதனை பயன்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டுதான் ‘வீட்டு தோட்டம்’ அமைப்பதற்கான இடு பொருட்கள் விற்பனையை தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது. இதன் மொத்த விலை ரூ.850 ஆகும். மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில், 12 கிலோ எடையுள்ள, ஆறு தென்னை நார் கழிவு கட்டிகள், ஆறு செடி வளர்ப்பு பைகள், வேப்ப எண்ணெய், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகிய உயிர் உரங்கள் இடம்பெற்றுள்ளது.


காய்கறி விதைகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், கொத்தவரை, தக்காளி, சுரைக்காய் உள்ளிட்ட, 6 வகையான காய்கறி விதை பாக்கெட்களும் கிடைக்கும். மேலும் தோட்டம் அமைப்பதற்கான செயல் விளக்க கையேடும் இடம் பெற்றிருக்கும்.

சென்னை நகரில், மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை துறை டிப்போ உள்ளிட்ட இடங்களில் இவற்றின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இதனை நகர வாசிகள் பயன்படுத்திக்கொள்ள தோட்டக்கலைத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 

Similar News