தவறி விழுந்த நடத்துனர்.. கவனிக்காமல் 2 கி.மீ தொலைவு பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநர்.!

தவறி விழுந்த நடத்துனர்.. கவனிக்காமல் 2 கி.மீ தொலைவு பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநர்.!

Update: 2020-12-14 11:15 GMT

ஆரல்வாய்மொழி அருகே நடத்துனர் கீழே விழுந்ததை பார்க்காமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று பிற்பகல் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து சரியாக எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நடத்துனர் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை கவனிக்காத ஓட்டுநர், அடுத்த பேருந்து நிலையம் வரும் வரை சென்றுள்ளார். அப்போதும், நடத்துனர் பேருந்தில் இல்லாதது அவருக்கு தெரியவில்லையாம்.

அந்த பேருந்து நிலையத்தில் ஏறிய சில பயணிகள், ஓட்டுநரிடம் சென்று நடத்துனர் எங்கே? டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த ஓட்டுநர், அப்போது தான் நடத்துனர் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததை உணர்ந்துள்ளார்.

உடனே மற்றொருவரின் உதவியுடன் நடத்துனர் விழுந்த இடத்திற்கு ஓட்டுநர் சென்றிருக்கிறார். அதற்குள்ளாகவே, நடத்துனர் கீழே விழுந்ததைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நடத்துனர் இல்லாமலேயே சுமார் 2 கி.மீ தூரம் ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளதாக பயணிகள் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட பேருந்து ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News