கருவறையை இடித்த அறநிலையத் துறை..சுவரேறிக் குதித்து தடுக்க முயன்ற பக்தர்கள்..தீர்வு தான் என்ன.?
கருவறையை இடித்த அறநிலையத் துறை..சுவரேறிக் குதித்து தடுக்க முயன்ற பக்தர்கள்..தீர்வு தான் என்ன.?
கோவில்களை தனியார் நிர்வாகம் செய்யும் முறை சரியில்லை, நிதியில் முறைகேடு நடக்கிறது, ஆகம விதிகள் பின்பற்றப்படுவது இல்லை, என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தித் தான் தமிழகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கோவில் நிர்வாகங்களை அரசு கையில் எடுக்கிறது. ஆனால் அதற்கென்று சட்டம் கொண்டு வந்து விதிகள் வகுக்கும் அரசே அவற்றைப் பின்பற்றுவதில்லை.
மற்ற அரசுத் துறைகளைப் போன்றே அறநிலையத் துறையிலும் நடக்கும் ஊழல்கள் நாளுக்கு ஒன்று என்ற அளவிலாவது வெளிவந்து கொண்டு தான் உள்ளன. இவற்றில் வெளிவராமல் போவது எத்தனை என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் வெளிவந்த அறநிலைத்துறை அட்டகாசங்களில் மிக முக்கியமான ஒன்று சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம்.இது நடந்தது கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று நள்ளிரவு நேரம். அப்படியானால் இப்போது இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சில நாட்களுக்கு முன் கோவில் நிலங்களை மதம் தொடர்பான காரியங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அறநிலையத் துறையின் வரலாறு அப்படி.
இந்த தீர்ப்புக்கு காரணம் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில். இந்தக் கோவிலின் கருவறையை பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரவில் இடித்த அறநிலையத் துறை, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையும் முறைகேடாக பயன்படுத்த அனுமதித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பிரகாரம் தாக்குப் பிடிக்காது என்று கூறி பக்தர்களின் எதிர்ப்பை மீறி அறநிலையத்துறை முதலில் வெளிப் பிரகாரத்தை இடித்தது. இது நடந்தது 2013-14ஆம் ஆண்டு கால கட்டத்தில். புனரமைப்பதாகக் கூறிவிட்டு கோவிலை இடிப்பதை பக்தர்கள் ஏற்கனவே எதிர்த்து வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு கோவிலின் உள் பிரகாரத்தையும் அறநிலையத் துறை இடிக்க முயன்றது.
அப்போது உஷாரான பக்தர்கள் நீதிமன்றத்தில் கோவிலை இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உள் பிரகாரத்தை இடிக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. எனினும் உள் பிரகாரத்தை புனரமைக்க ₹94.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்துள்ளனர்.