மதம்மாறி இடஒதுக்கீடு சலுகைகளை அனுபவிப்பவர்களுக்கு ஆப்பு - பணிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Update: 2021-06-02 08:59 GMT

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலகத்தில் உதவி தொழில்நுட்ப அதிகாரியாக பணியில் சேர்க்கப்பட்டு பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவரின் பணி நியமனம் செய்யும் பதவி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.


அப்போது பணிநியமனம் பெற்ற கௌதமன் தன் கல்வித் தகுதிச் சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின்போது தாக்கல் செய்யவில்லை என்றும் உரிய கல்வித் தகுதி பெறாத அவரது நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அதேபோல் தகுதியில்லாத கௌதமனை ஓய்வுபெற அனுமதித்த பல்கலைக்கழகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி, அவரை நியமனம் செய்வதற்கு பரிந்துரைத்த தேர்வுக் குழுவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.

பணி நியமனத்தின் போது பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் நியமனத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெயர், கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நேர்முகத்தேர்வு அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் பெற்ற ஊதியத்தை தேர்வுக்குழு உறுப்பினர்கள் திரும்ப வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல் போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் கொடுத்து ஒருவர் பணியில் சேர்ந்து இருந்தால் அவரை உடனடியாக பணியில் இருந்து பணிநீக்கம் செய்துவிட்டு அவரிடமிருந்து அவர் பெற்ற சம்பளத் தொகையை வசூல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Similar News