இதை செய்தால் மட்டுமே ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி: சவூதி அரேபியா அதிரடி முடிவு!

Update: 2021-03-04 11:27 GMT

ஹஜ் யாத்ரீகர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு போட்டுக்கொள்வதை கட்டாயமாக்க சவூதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்ண்டு சவூதி அரேபியா வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சவூதியின் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விதிக்கு இணங்காதவர்கள் ஹஜ் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


"ஹஜ்ஜுக்கு வர விரும்புவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாகும். அனுமதி பெற இது ஒரு முக்கிய நிபந்தனையாக இருக்கும்" என்று சவூதி அரசை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொது சுகாதார கண்ணோட்டத்தில் ஹஜ் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவதை உறுதிசெய்ய இந்த முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

மக்காவில் உள்ள ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி தூணாகும். தொற்றுநோய் காரணமாக 2020'ல் சவூதி இந்த யாத்திரையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களை ஹஜ் செய்ய அனுமதித்தது.


ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லீம்கள் மக்காவுக்கு வருகிறார்கள். மக்கா முஸ்லீம்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஹஜ் என்பது முஸ்லீம்களுக்கு கட்டாய மதக் கடமையாகும். இது அவர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த யாத்திரை ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல் ஹிஜ்ஜாவில் நடைபெறுகிறது. இதற்கிடையில், இந்தியாவின் சிறுபான்மை விவகார அமைச்சகம் தனது இணையதளத்தில் ஹஜ் மற்றும் உம்ராவின் சவூதி அரேபிய அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர், ஹஜ் 2021'க்கான செயல்முறை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Similar News