கோவில் அருகே சாக்கடை - உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Update: 2021-04-02 04:58 GMT

கோவை அருகே விநாயகர் கோவில் அருகில் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் அருகே விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு பின்பக்கம் கருப்பம்பாளையம் குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கழிவு நீர் செல்வதற்கு போதிய வசதிகள் இல்லாததால் அங்கிருந்து வரும் கழிவுநீர் கோவில் அருகே தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலை சுற்றி வர முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த கழிவு நீர் வடிந்து அருகே இருக்கும் 4 வழிச்சாலைக்கு செல்வதால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடமாடக் கூட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே சொலவம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் கழிவுநீர் வடியாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த கோவிலுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்காக கோவிலில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News