மக்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச LPG சிலிண்டர்? மத்திய அரசு திட்டம்!

Update: 2021-03-07 13:19 GMT

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச LPG சிலிண்டர்களை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 83 மில்லியனுக்கும் அதிகமான வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயுவின் விலை உயர்விலிருந்து நிவாரணம் வழங்கும் வகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தற்போது முனைப்புக் காட்டி வருகிறது.


உலகளாவிய விலை உயர்வை அடுத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, கடந்த ஜனவரி முதல் சிலிண்டருக்கு ரூ. 125 உயர்ந்துள்ளது. இதன் மூலம் LPG சிலிண்டரின் விலை ஜனவரி மாதத்தில் ரூ. 694 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 819 ஆக உயர்ந்துள்ளது. உண்மையில் கடந்த ஆண்டு மே முதல் டெல்லியில் சமையல் எரிவாயு விலை ரூ 237.50 அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் இன்னும் நாட்டை பாதித்து வருவதோடு, பல்வேறு மட்டங்களில் இடையூறுகளை ஏற்படுத்துவதால், நிதியாண்டு 2021-22ல் கூட மற்றொரு நிதி ஊக்கத் திட்டங்களை அறிவிக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உஜ்வாலா சந்தாதாரர்களுக்கு மூன்று இலவச LPG சிலிண்டர்களை வழங்குவதும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு தொற்றுநோய்களின் போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ், அனைத்து உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச LPG சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. LPG சிலிண்டர்களின் சில்லறை விற்பனை விலைக்கு சமமான ரொக்கத் தொகைகள் நேரடியாக பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டன.

2021-22 பட்ஜெட் இரண்டு ஆண்டுகளில் உஜ்வாலாவின் கீழ் 10 மில்லியன் பயனாளிகளை சேர்ப்பதாக அறிவித்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் குறைவான குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும் அரசாங்கத்தின் முதன்மை திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News