BSNL நிறுவனத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் - தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் பரவும் தகவல்!
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எதிராக நேர்மையற்ற சிலர், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் பரப்பும் பொய் பிரச்சாரம் அடிப்படை ஆதாரமற்றது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது என நேர்மையற்ற சிலர், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றனர்.
அவர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்துக்கு ஈர்க்க முயற்சிக்கின்றனர். இந்த பொய் பிரச்சாரம் அடிப்படை ஆதாரமற்றது.
கூடுதலாக உள்ள ஊழியர்களை குறைப்பதற்காக தானாக முன்வந்து ஒய்வு பெறும் திட்டத்தை மத்திய அமைச்சரவையின் முடிவுப்படி பிஎஸ்என்எல் அமல்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் தனது மறுமலர்ச்சி கட்டத்தில் உள்ளது. இதற்கான பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நெட்வொர்க்கை பராமரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கவும், பங்குதாரர்கள் குழுவை பிஎஸ்என்எல் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த நேர்மையற்ற சிலர், தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் பிஎஸ்எல்எல் நெட்வொர்க் சொத்துக்களை சேதப்படுத்தி, பிஎஸ்என்எல் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை பிஎஸ்என்எல் எடுத்து வருகிறது.
இது போன்ற சம்பவங்களை bsnlprchn@gmail.com என்ற இ-மெயில் அல்லது 9445024095 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.